TNEA 2026: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் 2ஆம் தேதி வரை வரவேற்கப்படுவதாக கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக இந்த விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.
www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதள வசதி இல்லாதவர்களுக்காக தமிழகத்தில் 110 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு மாணவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் OC/OBC/OBC-M/MBC ஆகிய பிரிவினருக்கு ரூ 500, SC/SCA/ST ஆகிய பிரிவினருக்கு ரூ 250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 8 ஆம் தேதி வெளியாகிறது.
அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்தபிறகு, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால் அங்கு சென்றுவிடுகின்றனர். அந்த பொறியியல் இடம் காலியாவதைத் தடுக்க, கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பிறகே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும்.
1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம். விண்ணப்ப பதிவு செய்துள்ள மாணவ மாணவிகளுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, அவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும்.
அதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும். விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் அதனை உறுதி செய்ய வேண்டும்.
முக்கிய ஆவணங்கள்
- 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
- 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (தேவைப்பட்டால்)
- 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று
- பள்ளி மாற்றுச் சான்று
- ஆதார் அட்டை
- EMIS Number (பள்ளி மேலாண்மை தகவல் மைய எண்- 11 இலக்கம் கொண்டது)
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்
- நேட்டிவிட்டி சான்றிதழ்
- சிறப்பு இடஒதுக்கீடு சான்றிதழ் (மாற்றுத் திறனாளி, விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள்)
- வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம்
- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்
கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர 2.53 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2,20,841 பேர் சேர்ந்துள்ளனர்.













Click it and Unblock the Notifications