நம்பலாமா? வேண்டாமா? நல்ல சீட்டை எடுத்துப் போடுமா EXIT POLL? கடந்த கால கணிப்புகள் எப்படி இருந்தது?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்நோக்கி இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இன்று வெளியாகும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் வெளியிடப்படும் இந்த EXIT POLL எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் எவ்வளவு நம்பகமானவை என்ற கேள்வி ஒவ்வொரு தேர்தலிலும் எழுவது வழக்கம். இதனால் கடந்த சில முக்கிய தேர்தல்களில் வெளியான கருத்துக் கணிப்புகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அவற்றுக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தது. அசாம், கேரளா,புதுச்சேரி ஆகிய சட்டமன்றத் தேர்தல்கள் சமீபத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றன.

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நிறைவடைந்தது. ஆனால், மேற்கு மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல்
இந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முழுமையாக முடிந்த பிறகே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India ) தெளிவான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று மாலை 6.30 மணிக்கு பிறகே தேர்தல் முடிவை கணிக்கும் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
எக்சிட் போல்
இந்நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த தேர்தல்களில் வெளியான கருத்துக் கணிப்புகள் எந்த அளவிற்கு துல்லியமாக இருந்தன என்பதையும் மக்கள் ஆர்வத்துடன் ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக 2011, 2016 மற்றும் 2021 ஆகிய மூன்று தேர்தல்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது வெளியான கருத்துக் கணிப்புகள், அதிமுக தலைமையிலான கூட்டணி 155 முதல் 170 இடங்கள் வரை பெறும் என்றும், திமுக கூட்டணி 65 முதல் 100 இடங்கள் வரை பெறும் என்றும் கணித்திருந்தன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
ஆனால் இறுதியில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. இதனால் அந்த ஆண்டு கருத்துக் கணிப்புகள் முழுமையாக துல்லியமாக அமையவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் கருத்துக் கணிப்புகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. அப்போது திமுக கூட்டணி 120 முதல் 140 இடங்கள் வரை வெற்றி பெறும் எனவும், அதிமுக கூட்டணி 85 முதல் 120 இடங்கள் வரை மட்டுமே பெறும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் அதிமுக தனித்து பெரும்பான்மை பெற்று 136 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்தது. திமுக கூட்டணி எதிர்பார்த்ததை விட குறைவான இடங்களையே பெற்றது.
தமிழக சட்டசபை தேர்தல்
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெளியான கருத்துக் கணிப்புகள் ஒப்பிடும்போது சற்றே துல்லியமாக இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த ஆண்டு திமுக கூட்டணி 160 முதல் 185 இடங்கள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. இறுதியில் திமுக கூட்டணி 159 இடங்களை பெற்று ஆட்சியை அமைத்தது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி 75 இடங்களை பெற்றது. இந்த முடிவு கருத்துக் கணிப்புகளுக்கு அருகிலேயே இருந்ததாக பலரும் மதிப்பிட்டனர்.
கருத்துக் கணிப்பு துல்லியம்
இவ்வாறு கடந்த தேர்தல்களில் வெளியான கருத்துக் கணிப்புகள் சில சமயங்களில் உண்மையான முடிவுகளுடன் பொருந்தியிருந்தாலும், சில வேளைகளில் பெரிய அளவில் மாறுபட்டதையும் காண முடிகிறது. அதனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை முழுமையாக நம்புவதற்கு முன் அவற்றை ஒரு முன்னறிவிப்பாக எனப் பார்க்க வேண்டும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
2026 தமிழக தேர்தல் கணிப்பு
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாக இருப்பதால், எந்த கூட்டணிக்கு முன்னிலை கிடைக்கும் என்ற ஆவல் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் இறுதியான முடிவு வாக்கு எண்ணிக்கை நாளில் மட்டுமே உறுதியாக தெரியும் என்கின்றனர். காரணம் திமுக - அதிமுக தவிர்த்து தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்கியிருப்பதால் சில மாற்றங்களும், ஏன்? குழப்பங்கள் கூட இருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications