களம் ரொம்ப கஷ்டமா இருக்கே! கணிக்க முடியாமல் திணறும் ஜாம்பவான்கள்! 2 டானுக்கு நடுவுல புகுந்த விஜய்!
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் திமுகவே ஆட்சிமையக்கும் என்கின்றனர். டைம்ஸ் நவ், ஜேவிசி போன்றவை அதிமுக ஆட்சி என்றும், ஆக்சிஸ் மை இந்தியா, காமக்யா ஆகியவை தவெக என்றும் சொல்கின்றனர். இந்நிலையில், கடந்த காலங்களைப் போல இல்லாமல் தேர்தல் முடிவுகளை கணிப்பது ஏன் இவ்வளவு கடினமாகி விட்டது என்ற கேள்வி இப்போது அரசியல் வட்டாரங்களில் மிக அதிகமாக பேசப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பிறகும் மக்கள் ஆதரவு இந்தக் கட்சிக்குத் தான் ஆதரவாக இருக்கிறது என்று உறுதியாக சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் தவெக தான்.

கடந்த 2024 மக்களவை தேர்தல் வரை தமிழக அரசியல் என்றால் திமுக மற்றும் அதிமுக இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையேயான போட்டியாகவே இதுவரை இருந்தது. ஆனால் இந்த முறை, அந்த பழைய அரசியல் கணக்குகளை முற்றிலும் மாற்றி அமைக்கும் வகையில் புதிய சக்தியாக தவெக களமிறங்கியுள்ளது.
இதுவே தற்போது பலரது கணிப்புகளை சிக்கலாக்கியுள்ளது. பொதுவாக தேர்தல்களில் வாக்காளர்களின் மனநிலையை ஆய்வு செய்து முடிவுகளை கணிக்க முடியும். ஆனால் இந்த முறை, "யாருக்கு வாக்களித்தீர்கள்?" என்ற கேள்விக்கு கூட பலர் நேரடியாக பதில் அளிக்காமல் தவிர்க்கும் நிலை உருவாகியுள்ளது.
தேர்தல் கணிப்பு
அதே நேரத்தில், வெளியில் பேசும் போது "விஜய்க்குத்தான் ஓட்டு" என்ற கருத்து அதிகமாக கேட்கவும் முடிகிறது. இது தான் பல நாட்கள் களத்தில் இருக்கும் ஆய்வாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், விஜய்யின் தனித்துவமான ரசிகர் படை. அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல; பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த நடிகர். அந்த உணர்ச்சி, இந்த தேர்தலில் அரசியல் ஆதரவாக மாறியிருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
திமுக - அதிமுக
குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள், சமூக வலைதளங்களில் செயல்படும் ஆதரவாளர்கள் ஆகியோரிடம் விஜய்க்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பல ஆண்டுகளாக திமுக - அதிமுகவை ஆதரித்து வந்த குடும்பங்களில், இளம் தலைமுறை தவெக பக்கம் சாய்ந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகே தெரியவரும். அதே நேரத்தில், இன்னொரு முக்கிய சிக்கல் என்னவென்றால், தவெக பெரும்பாலான தொகுதிகளில் புதிய முகங்களை நிறுத்தியுள்ளது.
விசில் சின்னம்
அந்த வேட்பாளர்களை மக்கள் பெரிதாக அறியாத சூழலில், "விசில் சின்னம்" என்ற அடையாளத்தின் பேரில் வாக்கு போடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கெதிராக ஒரு வலுவான கருத்தும் உள்ளது. தமிழகத்தில் உடனடியாக ஆட்சி மாற்றம் ஏற்படுவது அரிது; தமிழகத்தில் எம்ஜிஆர், ஆந்திராவில் என்.டி.ஆர் போன்ற முன்னோடி தலைவர்களின் காலத்தில் தான் அது சாத்தியமானது. இப்போது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக வாக்களிக்கிறார்கள். அனுபவம், நீண்டகால அரசியல் செயல்பாடுகளை பார்த்தே முடிவு செய்கிறார்கள் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
தவெக வாக்குகள்
அதே நேரத்தில், தவெக பெறும் வாக்குகள் பெரும்பாலும் அதிமுக வாக்குகளாகவே இருக்கக் கூடும் என்ற கருத்தும் உள்ளது. அது உண்மை என்றால், அதிமுகவின் வாய்ப்பு குறையும்; ஆனால் அதே நேரத்தில் அதிமுக திமுகவுக்கு ஆதரவாக அமையும். இது ஒருபுறம் இருக்க இந்த முறை தொங்கு சட்டமன்றம் அமையும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தால், கூட்டணி அரசியல் முக்கியமாக மாறும். அப்போது தவெக போன்ற கட்சியின் பங்கு மிக முக்கியமாகும்.
அடுத்து என்ன நடக்கும்?
மொத்தத்தில் பார்க்கும்போது, 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தலாக மாறியுள்ளது. காரணம் வெறும் வாக்கு சதவீதம் மட்டுமல்ல.. வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம், புதிய தலைமுறை ஈடுபாடு, சமூக வலைதள தாக்கம், மற்றும் விஜய் உருவாக்கிய தனித்துவமான அரசியல் என இந்த எல்லா காரணங்களும் சேர்ந்து, "யார் வெல்வார்?" என்ற கேள்வியை விட " அடுத்து என்ன நடக்கும்?" என்ற குழப்பத்தை தான் அதிகரித்துள்ளன. இதற்கான பதில் கிடைக்க இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டியது தான்.













Click it and Unblock the Notifications