ஆக்சிஸ் மை இந்தியா வீசிய அணுகுண்டு.. தமிழகத்தில் விஜய் அலை.. திமுகவுக்கு ஷாக்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் பலத்துடன் நிற்கிறார்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக,, தவெக இடையே கடுமையான போட்டி என்றும் தவெக அட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி வாக்காளர் பட்டியலின்படி சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் 85 சதவீதம் பேர் தேர்தலில் வாக்களித்திருந்தனர்.

தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ராமதாஸ் - சசிகலா தனி கூட்டணி அமைத்தனர். மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு 117 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சிக்கு தான் பெரும்பான்மை கிடைக்கும்.
நடிகர் விஜய் தவெக மூலம் அரசியலில் இறங்கிருப்பது தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளின் வாக்குகளையும் விஜய் பிரித்துள்ளதால் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு என்பது யாராலும் எளிதில் கணிக்க முடியாத வகையில் உள்ளது. வருகிற மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணி 91 - 110 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக 22 - 32 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
விஜய்யின் தவெக 98 -120 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் தமிழர் உள்ளிட்ட மற்றவர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார்கள் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவீத அடிப்படையில் திமுக, தவெக இரண்டு கட்சிகளும் 35 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக 23 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போலில் கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி 3 சதவீதம், மற்றவர்கள் 4 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்றும் அந்தக் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக, தவெக இடையே தான் போட்டி என்று விஜய் சொல்லி வந்தார். அதேபோல இந்த கணிப்பில் திமுக - தவெக இடையே கடுமையான போட்டி என்றும் அதில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications