HCL-ல் லேப்டாப் வாங்கலையா? தமிழரான ஷிவ் நாடாரை புறக்கணித்தது ஏன்? ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி
சென்னை: தமிழக அரசு நாளை இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்குகிறது. இதற்காக டெல், எச்பி உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்துள்ளது. இந்த நிலையில் தமிழரான ஷிவ் நாடாரின் HCL லேப்டாப்களை ஏன் வாங்கவில்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பிள்ளார். இவரது இந்த கேள்விக்கு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதுகுறித்து அவர் கூறுகையில், மாணவர்களுக்கான 10 லட்சம் லேப்டாப்களை உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நம் தமிழரான ஷிவ் நாடார், தனது எச்சிஎல் (HCL) கம்பெனியில் இருந்து திருச்செந்தூருக்கு 300 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறார்.
உலகத்தரம் வாய்ந்த லேப்டாப் அங்கு இல்லையா? உலகத்தரம் வாய்ந்தது என்றால் எதை குறிப்பிடுகிறீர்கள்? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
HCL நிறுவனம் லேப்டாப்களை தயாரிப்பதை நிறுத்தி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதாகவும் அந்த நிறுவனம் சாப்ட்வேர் நிறுவனமாகிவிட்டதாகவும் நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.
அது போல் சிலர் முன்னாள் ஆளுநராக இருந்தும் கூட ஒரு அரசாங்கத்தை கொள்முதல் விவரங்களை தமிழிசை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறாரே என்கிறார்கள். அதாவது பொதுவாக இது போல் லேப்டாப், சைக்கிள், உள்ளிட்ட பொருட்கள் தேவை என்றும் அதற்கான செலவு எவ்வளவு என்றும் அரசு டெண்டர் விடும். அந்த டெண்டரில் எந்த நிறுவனம் குறைந்த விலையில் நிறைய சேவைகளை செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுக்கும். அந்த வகையில் எச்பி, டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் குறைந்த விலையில் நல்ல பிராசசர், அதிக மெமரிகளை கொடுப்பதாக சொல்லியிருப்பார்கள். அதனால் இந்த ஒப்பந்தங்கள் அவர்களுக்கு சென்றுள்ளன என்கிறார்கள்.
தமிழகத்தில் அரசு பொறியியல், வேளாண், கலை மற்றும் அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு நாளை இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
20 லட்சம் மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு நாளை முதல் கட்டமாக வழங்கப்படுகிறது. டெல், ஏசர், எச்பி உள்ளிட்ட உயர்தர நிறுவனங்களின் லேப்டாப் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுடன் வழங்கப்படுகின்றன. இந்த லேப்டாப்கள் ஐ3 பிராசசர் , 8 ஜிபி ரோம், 256 ஜிபி மெமரி, பாஸ் லினக்ஸ் ஓஎஸ் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டது.
"அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்கு புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உள்ளது. மேலும் பெர்பிளக்ஸிடி ப்ரோ 6 மாதம் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாபெரும் டிஜிட்டல் கனவை நனவாக்கும் வரலாற்று பெருமைகள் சேர்க்கும் கல்வி புரட்சித் திட்டமாக இது அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் வழங்கும் திட்டம் அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இல்லாமல் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு இலவச சைக்கிள், இலவச லேப்டாப், இலவச புத்தகம், இலவச சீருடை, இலவச புத்தகப் பை உள்ளிட்ட சலுகைகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. அது போல் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ 3000 வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications