தீபாவளிக்கு மறுநாளே "டபுள் குஷி"..இன்று தமிழ்நாடு முழுக்க அரசு விடுமுறை! பள்ளி, கல்லூரிகள் இயங்காது
சென்னை: தீபாவளியை முன்னிட்டு இன்றும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க நேற்று தீபாவளி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. சில மாநிலங்களில் கலாச்சாரம் காரணமாக இன்று அதிகாலை தீபாவளி கொண்டாடும் வழக்கம் உள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் நேற்று சிறப்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது.

தீபாவளி அறிவிப்புகள்: முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களிடம் நிலவிய பணப்புழக்கம் காரணமாக இந்த முறை முன்பை விட பலர் தீபாவளியை வெகுவிமரிசையாக கொண்டாடினார்கள். முக்கியமாக கோழிக்கறி குழம்பு, இட்லி தொடங்கி புதிய ஆடை, பிற்பகலுக்கு சிக்கன் குழம்பு என்று தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 42% அகவிலைப்படி 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு போனஸ்: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் நடப்பாண்டிலும் 10% போனஸை அரசு அறிவித்தது. ஆனால் இந்த போனஸை 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இது போக விரைவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் போனஸ் உயர்த்தி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மத்திய அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. C பிரிவு & கெசட் ரேங்க் இல்லாத B பிரிவு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல துணை ராணுவப் படைகளில் பணிபுரிவோருக்கும் தீபாவளி போனஸ் அளிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7000 வரை போனஸ் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
விடுமுறை : பல குடும்பங்களில் தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட இந்த போனஸ் மிகவும் முக்கியமாக உதவும். அதேபோல் 1000 ரூபாய் உரிமை தொகையும் இந்த மாதம் முன்கூட்டியே 10ம் தேதி வழங்கப்பட்டது.

இந்தாண்டு நேற்று நவ. 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதன் ஒரு கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை அதாவது இன்று, தமிழ்நாடு அரசு விடுமுறை விட உள்ளதாக அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்றும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு. வெளியூர் செல்லும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதை ஏற்றுக்கொண்டு தற்போது பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications