Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகதாது அணை விவகாரம்: "ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்".. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக பிரச்சனைகள் எழுந்து வருகின்றன. நீதிமன்றங்கள் வழக்கு தொடர்ந்தும், ஆணையங்கள் அமைக்கப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, மேகதாது திட்டத்தை அமல்படுத்த 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு - கர்நாடகா இடையே கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக காவிரி நதி நீர் பங்கீட்டில் பஞ்சாயத்து நிலவி வருகிறது. கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்காக நீண்ட வருடங்களாக முயற்சித்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக யார் ஆட்சியில் இருந்தாலும் இந்த விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாக புகார் உள்ளது.

tamil-nadu-government-appeals-to-supreme-court-in-mekedatu-dam-case

இந்நிலையில், கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் மேகதாதுவில் புதிய தடுப்பணை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய நீர்வளத்துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி உள்ளிட்டோரும் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

காவிரியின் குறுக்கே

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான தீவிர நடவடிக்கைகளை கர்நாடகா அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி தமிழக அரசு தொடர்ந்து போராடி வந்தாலும், அணை கட்டுவதில் கர்நாடக அரசு கடுமை காட்டி வருகிறது.

இதனிடையே, மேகதாதுவில் அணை கட்டுவதற்காக விரிவாகன திட்ட அறிக்கை தயார் செய்யுமாறு உச்சநீதிமன்றம் கர்நாடாக அரசுக்கு அனுமதி கொடுத்ததோடு, தமிழக அரசின் கருத்தக் கேட்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில், 30 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை கர்நாடக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்நிலையில், மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ஒரு பெரிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்ததை எதிர்த்து, தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளும் 13.11.2025 அன்று விசாரணைக்கு வந்தன.

இதில், மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், 16.02.2018 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் பத்தி 353 இல் கூறியுள்ளபடி, மேகதாது அணை கட்ட முயற்சிப்பது, இருமாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையை மேலும் பெரிதாக்கும் என்பதையும் குறிப்பிட்டு தமிழ்நாடு வாதிட்டது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஆணை 22.11.2025 அன்று வெளிவந்தது.

தொடக்க நிலையில் மேகதாது அணை

இந்த ஆணையில், மேகதாது அணை தொடக்க நிலையில் தான் உள்ளது என்றும், இத்திட்டம் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்பிற்கு உட்பட்டதா இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக்குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அதன் வாதங்களை மத்திய நீர்வளக் குழுமத்திடம் முன்வைக்கவும் ஆணையிட்டுள்ளது.

மேலும், இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துகள், குறிப்பாக, மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தாங்களே முடிவு செய்யலாம் என தெரிவித்திருப்பது, 16.02.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் பத்தி 447 இல், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீர், ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளதற்கு முரணாக உள்ளது.

மறுஆய்வு மனு தாக்கல்

ஆகையால், இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக வாதிடும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலேசானைபடியும், முதல்வரின் உத்தரவின்படியும், உச்சநீதிமன்றத்தின் 13.11.2025 ஆணையை மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு 11.12.2025 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.

மேலும், மத்திய நீர்வளக் குழுமத்திடமும் மேகதாது அணை எவ்வாறு தமிழகத்திற்கு பாதகமாக இருக்கும் என்பதையும், உச்சநீதிமன்ற ஆணைக்கு முரணாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டு, ஒரு விரிவான மனுவை 09.12.2025 அன்று அளித்துள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+