அரசு பஸ்சை பிரிய முடியாமல் கண்கலங்கிய டிரைவர்.. மதுராந்தகம் பணிமனையில் நெகிழ வைத்த சம்பவம்
சென்னை: சென்னை அருகே மதுராந்தகம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 30 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றி வந்த பரமசிவம் என்பவர் ஓய்வு பெற்றார். அப்போது அவர் தான் ஓட்டிய பஸ்சை விட்டு பிரிய மனமின்றி கண்கலங்கினார். டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டீரிங்கில் படுத்து கண்கலங்கி, ‛‛கடைசியாக இந்த பஸ்சை ஒருமுறை ஓட்டிக்கிறேன்'' என்று ஒரு ரவுண்ட் சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‛படையப்பா'. இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தந்தையாக சிவாஜி கணேசன் நடித்திருப்பார். சிவாஜி கணேசனின் தம்பியாக மணிவண்ணன் நடித்திருப்பார். படத்தில் மணிவண்ணன், சிவாஜி கணேசன் மீது ஒரு புகார் கொடுப்பார்.

இருவருக்கும் சொந்தமான சொத்துகளை சிவாஜி கணேசன் மட்டுமே அனுபவிக்கிறார். ஊருக்கு செலவழிக்கிறார். இதனால் சொத்துகளை பிரிக்க வேண்டும் என்று புகார் செய்திருப்பார். மேலும் தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து தரும்படி மணிவண்ணன், சிவாஜி கணேசனிடம் கேட்பார்.
அதன்பிறகு சிவாஜி கணேசன், ‛‛இந்த சொத்தை பிரிக்க அனுமதிக்க மாட்டேன். எல்லா சொத்தையும் என் தம்பியே எடுத்துக்கிட்டு போகட்டுமே.. எனக்கு இருக்கிற ஒரே சொத்து இவன் தான் (ரஜினிகாந்தை கைகாட்டுவார்) என்று சொல்லி'' குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறிவார். அப்போது ‛‛நான் வாழ்ந்த இந்த வீட்டில் கடைசியாக ஒருமுறை இருந்துட்டு வந்துடறேன்'' என்று சிவாஜி கணேசன் சொல்வது அனைவரையும் கலங்க வைக்கும். காலம் காலமாக வாழ்ந்த வீட்டை விட்டு பிரிவது பெரிய மனவலியை தரும்.
இது வீட்டுக்கு மட்டுமின்றி செல்லமாக வளர்ந்த பிராணிகள், வாகனங்கள் விட்டு பிரிவதும் படையப்பா படத்தில் சிவாஜி அனுபவிக்கும் வலியை தான் தரும். அப்படி அரசு பஸ்சை பிரிய முடியாமல் டிரைவர் தனது ஓய்வின்போது கண்கலங்கிய சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது. செங்கல்பட்டு மதுராந்தகத்தில் உள்ள பணிமனையில் 30 ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் பரமசிவம்.
இவர் டிஎன் 21 என் 1615 என்ற பதிவெண் கொண்ட பஸ்சில் டிரைவராக பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் பரமசிவம் தனது டிரைவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடைசி நாளில் அவர் அரசு பஸ்சுடன் மதுராந்தகம் பணிமனைக்கு வந்தார்.
அப்போது அவரது குடும்பத்தினர், சக ஊழியர்கள் அவருக்கு மாலை அணிவித்து பணி ஓய்வுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த வேளையில் பரமசிவம் கண்கலங்கினார். 30 ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றியதை நினைத்து அவர் கண்கலங்கினார். மேலும் அவரால் தான் ஓட்டிய பஸ்சை விட்டு பிரிய மனமில்லை.
இதனால் பணிமனையில் நிறுத்தப்பட்ட அந்த பஸ்சின் முன்புறம் சென்று முத்தம் கொடுத்து கண்கலங்கினார். பிறகு, ‛‛கடைசியாக இந்த பஸ்சை ஒருமுறை ஓட்டிக்கிறேன்'' என்ற வகையில் அவர் பஸ்சுக்குள் ஏறினார். டிரைவர் இருக்கையில் அமர்ந்து ஸ்டீரிங்கை பிடித்து அழுதார். அதன்பிறகு பஸ்சை வைத்து பணிமனையில் கடைசியாக ஒரு சுற்று சுற்றி வந்து நிறுத்தினார்.
அதன்பிறகும் பஸ்சின் முன்பகுதியை கையால் வருடி முத்தம் கொடுத்து அங்கிருந்து சென்றார். பரமசிவம் தான் ஓட்டிய பஸ்சை விட்டு பிரிய முடியாமல் கண்கலங்கியதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications