உடனே கோர்ட்டுக்கு ஓடிய கிண்டி ரேஸ் கிளப்.. நோட்டீஸ் அளித்தபின் நடவடிக்கை எடுப்பதாக தமிழக அரசு உறுதி!
சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு இன்று காலை தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை எதிர்த்து சென்னை கிண்டி ரேஸ் கிளப் சார்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்ட நிலையில் ரேஸ் கோர்ஸ் குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் ரேஸ் கோர்ஸுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று காலை, ரேஸ் கிளப்புக்கான குத்தகையை ரத்து செய்து, நிலத்தை சுவாதீனம் எடுத்தது தமிழக அரசு. வருவாய்த்துறை அதிகாரிகள், ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தனர். , 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கித் தொகையாக ரூ.730 கோடியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ராஜசேகர் அமர்வில் கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. இதுசம்பந்தமான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், இன்று காலை குத்தகையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த நிலையில், ரேஸ் கோர்ஸ் காலி செய்ய அவகாசம் கொடுக்காமல், சுவாதீனம் எடுத்தது சட்டவிரோதமானது எனவும், அதற்கு நீதிமன்றம் துணை போகாது எனவும் இது அரசின் அத்துமீறல் எனவும் கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தான் நிலம் பயன்படுத்தப்பட வேண்டும் என குத்தகைக்கு விடப்பட்டதாகவும் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அங்கு குதிரை பந்தயம் நடைபெறுவதாகவும், மண்டபம் நடத்த வாடகைக்கு விடப்படுவதாகவும் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
பின்னர் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஒரே நேரத்தில் குத்தகையை ரத்து செய்து நிலத்தை சுவாதீனம் எடுக்க கூடாது எனவும், குத்தகை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பதால், காலி செய்ய அவகாசம் வழங்கும் வகையில் குத்தகை ரத்து உத்தரவு குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், ரேஸ் கிளப் குத்தகை ரத்து செய்து தொடர்பான நோட்டீஸ் வழங்கி பின்னர் காலி செய்வதற்கான அவகாசம் கொடுத்த பின்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications