பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே “ஸ்வீட்”.. தமிழக அரசு ஏற்பாட்டால் மாணவர்கள் குஷி!
சென்னை: பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான வரும் திங்கட்கிழமையே மாணவர்களுக்கு "ஸ்வீட்" கொடுக்க இருக்கிறது தமிழக அரசு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10 ஆம் தேதி அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மே மாதம் வெளியிட்டது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல கருணாநிதி பிறந்த நாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் மூன்றாம் தேதி கோடை விடுமுறையில் சென்றதால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10 ஆம் தேதி அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் முதல் தேதியிலேயே பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் இந்த முறை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தாலும் ஜூன் முதல் வாரத்தில், அதாவது ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிலும் ஆசிரியர்கள் ஈடுபட்டதால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கோடை வெயில் காரணமாக 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அன்றைய நாளில், அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிதி உதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பாடப்புத்தகம், நோட்டுப்புத்தகம், புவியியல் வரைபடம் ஆகிய நலத்திட்டப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுளது.
மேலும் அதைத்தொடர்ந்து, புத்தகப்பை. காலணிகள், காலேந்திகள் மற்றும் கம்பளிச்சட்டை மழைக்கோட்டு, பூட்ஸ், காலுறைகள், வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் ஆகிய நலத்திட்டப் பொருட்களும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications