தமிழக அரசின் அடுத்த ஆயுதம்.. RTE திட்ட நிதி எங்கே? மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE Act) கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ. 617 கோடி நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கல்வி சார்ந்த நிதியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு தர மறுப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய 617 கோடி ரூபாயை விடுவிக்காமல் கால தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 617 கோடி நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
ரூ.600 கோடி வரை நிலுவை பணம் வர வேண்டி உள்ளது. இதுகுறித்து நேரடியாக சென்று வலியுறுத்தியுள்ளோம். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு அரசுக்கு பிஎம் ஸ்ரீ சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார். தமிழக எம்.பி- க்களும், அமைச்சர்களும் பலமுறை மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் வருகின்றனர்.
இதற்கிடையே, "தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது" என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தமிழ்நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்தது.
மேலும், மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,291 கோடி நிதியை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அரசியல் அமைப்பு பிரிவு 131 இன் கீழ், மத்திய அரசுக்கு எதிராக ரூபாய் 2291 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரத்து 769-ஐ நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் மீட்டுத் தரக் கோரி தமிழ்நாடு அரசு சார்பாக மத்திய அரசு மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், RTE நிதி தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications