அறுபடை முருகனை செலவில்லாமல் தரிசிக்கலாம்.. தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு! எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்கிறது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில் வரும் ஆண்டுக்கான ஆன்மீகப் பயணத்திற்கு விண்ணப்பிக்கும் முறை தகுதி உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படும், ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருத்தலங்களுக்கும் சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிகப் பயணம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டும் வருகிறது.

மேலும் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக கடந்த ஆண்டு 200 பக்தர்களும், நடப்பாண்டில் 300 பக்தர்களும் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலை ஆகியவற்றுக்கு மூத்த குடிமக்கள், கட்டணமில்லாமல் ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் 60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டுக்கு 5 முறை 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை, கந்தகோட்டத்தில் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய முதற்கட்டப் பயணத்தில் 207 மூத்த குடிமக்களும், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து மார்ச் 6-ம் தேதி புறப்பட்ட 2-ம் கட்ட பயணத்தில் 200 மூத்தகுடிமக்களும் பங்கேற்று பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மிகப்பயணத்தின் 3-ம் கட்டப் பயணம் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையே அடுத்த கட்ட அறுபடை வீடு ஆன்மீக பயணம் செய்ய விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடு இலவச ஆன்மிக பயணத்திற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலங்களில் பெற்றுக் கொள்ளலாம் எனவும்,
https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற தமிழ்நாடு அரசின் இந்து அறிநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கும் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/178/document_1.pdf என்ற லிங்கில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்..
அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஆன்மிக பயணம் செல்வதற்கு தேர்வு செய்து அனுமதிக்கப்படுவர்
1. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
2. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், 70 வயதிற்குட்பட்டவாராகவும் இருத்தல் வேண்டும்.
3. வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
4. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும்.
5. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்கப்படவேண்டும்.
6. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தங்களுடன் சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை.
7. ஆதார் கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் (Pan card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
8. விண்ணப்பங்கள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பெற்றுக் கொண்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
9. மேலும் விண்ணப்பங்களை இத்துறையின் (hrce.tn.gov.in) வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
10. ஆன்மிக பயணம் செல்லும் பக்தரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அதற்கான வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும்.
11. பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இப்பயணத்தில் கலந்து கொள்ள முடியும்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications