சென்னை எண்ணூரில் மூச்சுத்திணறிய மக்கள்.. அமோனியா கசிந்த தொழிற்சாலையை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலைக்கான குழாயில் இருந்து அமோனியா வாயு இன்று அதிகாலையில் கசிந்ததால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த தொழிற்சாலையை மூட அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 3 மற்றும் 4ம் தேதி மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக இந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. அந்த சமயத்தில் மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் எனும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திலிருந்து கசிந்த எண்ணெய் மழைநீரில் கலந்தது.

இதனால் எண்ணூர் மக்கள் பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் எண்ணெய் கலந்ததால் அவர்களின் வீடு, வாகனங்களில் கறை படிந்தது. இதையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர்.
இதற்கிடையே தான் திடீரென்று நேற்று எண்ணூரில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவமதிக்குள்ளாகினர். அதாவது சென்னை பெரியகுப்பம் பகுதியில் கோரமண்டல் உரத்தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு கடலில் இருந்து குழாய் மூலம் திரவ அமோனியா கொண்டு வரப்படுகிறது. இந்த குழாயில் இருந்து அமோனியா வாயு திடீரென்று இன்று அதிகாலையில் கசிந்தது.
‛கேன்சர்’ கூட வரலாம்.. எண்ணூர் எண்ணெய் கசிவால் வந்த புதிய சிக்கல்.. சென்னை மக்களே உஷார்
இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மூச்சுத்திணறல், கண்எரிச்சல், வாந்தி, மயக்கத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மேலும் ஆலை நிர்வாகமும் அமோனியா வாயு கசிவை சரிசெய்யும் பணியை தொடங்கியது. முதற்கட்டமாக பஸ்களில் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து போராடி ஒருவழியாக குழாயில் ஏற்பட்ட அமோனியா கசிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இதுபற்றி தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக அமோனியா கசிவு ஏற்பட்ட குழாயில் உடைப்பு சரிசெய்தாலும் கூட இனி இனி தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை மீண்டும் இயக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அந்த தொழிற்சாலையின் மெயின் வாயிலில் உள்ள கதவில் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க தமிழக அரசு சார்பில் வல்லுநர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழக கடல்சார் வாரியத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர மாசு கட்டுபாட்டு வாரியம் சம்பவம் தொடர்பாக தனியே விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications