டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயருகிறது.. தமிழக அரசு அதிரடி திட்டம்..அதிலும் ஒரு ட்விஸ்ட்!
சென்னை: தமிழகத்தில் மதுபானங்களின் விலை விரைவில் கணிசமாக உயரப்போகிறது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயரப்போவதாக டாஸ்மாக் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மொத்த நிதி ஆதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமானம் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கடைகள் மூலம் வருவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் 10000 கோடியாக இருந்த வருமானம், இன்று 45000 கோடி என்கிற அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மதுவால் வரும் வருமானத்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட முடியாது. அந்த அளவிற்கு தமிழக அரசின் முக்கிய நிதி ஆதாரங்களில் ஒன்றாகமதுவால் வருமானம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தான் என்று இல்லை. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் அதிகப்படியான வரி வருவாயாக ஆக மதுபானத்தை விற்பதால் வரும் வருமானம் தான் இருக்கிறது என்பது கசப்பான உண்மை.

மதுக்கடைகள் நேரம் குறைக்கப்பட்ட போதிலும், மதுவிற்பனை கடைகள் குறைக்கப்பட்ட போதும், தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் மதுவிற்பனை மட்டும் குறையவே இல்லை.. அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் முடிந்து டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட கூத்துகளே பெரிய சாட்சி. 2020ஐ ஒப்பிடும் போது இப்போது மதுவிற்பனை அதிகரித்தபடியேதான் உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, படிப்படையாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்தது.. இதன்படி கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டது.
தற்போதைய நிலையில் பேருந்து நிலையங்களை ஒட்டி பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயக்கி வருகின்றன. மேலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய உட்புற சாலைகளிலும் அதிக அளவு இயங்கி வருகின்றன. அதேபோல் சில இடங்களில் பொதுமக்கள் அதிகம் புழங்கும் இடங்களிலும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.
அரசுக்கு தற்போது 45000 கோடி வரிவருவாய் ஆண்டுக்கு வந்த போதிலும், அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதையடுத்த வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறாரகள்.
இதுபற்றி டாஸ்மாக் வட்டாரத்தில் உள்ள அதிகாரிகள் கூறும் போது, மூலப்பொருட்களின் விலை உயர்வால் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். தமிழகு அரசுக்கும் நிதிச்சுமை ஏற்பட்டு வருகிறது. எனவே மது வகைகள் விலைகள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு தான் முடிவு செய்யும் என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications