டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட புதுமை பெண் திட்டம் குறித்த கேள்வி! ஒன்றரை மார்க் உறுதி!
சென்னை: தமிழக அரசு தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் புதுமை பெண் திட்டம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு 5 விடைகளும் கொடுக்கப்பட்டன. அதில் சரியான ஒரு விடையை எழுத வேண்டும்.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி துணை ஆட்சியர் முதல் விஏஓ வரை பல துறைகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 இல் தொடங்கி 8 குரூப் வரை காணப்படுகிறது. இதில் இன்றைய தினம் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித் துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்கு இன்று குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது.
இதில் prelims எனப்படும் முதல்நிலை தேர்வும் mains எனப்படும் முதன்மை தேர்வும் நடத்தப்படுகிறது. இன்று நடந்த முதல் நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 2.38 லட்சம் பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் 797 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 16 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி)-23, வணிகவரித்துறை உதவி ஆணையர்-14, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 21, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்- 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 1, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 1 பணியிடம் என 90 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டது.
தேர்வர்கள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 11.59 மணி வரையில் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வினை எழுதுவதற்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1,25,726 ஆண்களும், 1,12,501 பெண்களும், 20 மூன்றாம் பாலினத்தவரும் இன்று குரூப் 1 முதல்நிலை தேர்வை எழுதினர். இந்த தேர்வில் பொது அறிவில் 175 கேள்விகளும், மென்ட்டல் மேத்ஸில் 25 கேள்விகளும் என 200 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு 300 மதிப்பெண்கள் ஆகும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை.
இன்று நடத்தப்பட்ட தேர்வில் தமிழக அரசு கொண்டு வந்த புதுமை பெண் திட்டம் குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது.
தமிழக அரசின் புதுமை பெண் திட்டம் எதை உறுதிப்படுத்துகிறது? என்ற கேள்விக்கு ஆப்ஷன்களாக
A) அரசியலில் பெண்களின் பங்கு
B) பெண்களுக்கு உயர் கல்வி
C) பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதிகப்படுத்துதல்
D) திருமண உதவி திட்டம்
E) விடை தெரியவில்லை
என 5 ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு சரியான விடை B) பெண்களுக்கு உயர் கல்வி என்பதாகும்.
இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகளில் பயின்று அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications