உடையை பார்த்தாலே உற்சாகம் வரும்.. தனியார் பள்ளிகளையே வாயை பிளக்க வைக்க போகும் அரசு பள்ளிகள்
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு தனியார பள்ளிகளுக்கு நிகராக இந்த ஆண்டு சீருடை மிடுக்காக தைத்து வழங்கப்பட உள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதமே மாணவர்களுக்க அளவெடுத்து சீருடை தைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு தோறும் அரசு சார்பில் பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பை, காலணி உள்ளிட்ட கல்வி சார்ந்த உபகரணங்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. இதேபோல் இலவசமாக சீருடை வழங்கப்படுவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அன்றே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை பொறுத்தவரை அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு பள்ளி திறக்கப்படுகின்ற நாளான ஜூன் 10ம் தேதியே பாடப்புத்தகம் மற்றும் பை, காலணி, நோட்டு புத்தங்கள் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் வழக்கமாக இல்லாமல் புதிய முயற்சியாக இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை நேர்த்தியாக தைத்து கொடுக்க அரசு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படியே ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தனியார் பள்ளியைப் போல மிடுக்காக செல்லும் வகையில் சீருடை அளவு எடுத்து தைத்து வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த காலங்களில் பொதுவான அளவீடு மூலம் தைத்து தருவார்கள். இதனால் சீருடை பிட்டாக இல்லாமல் இருந்தது. தாத்தா சட்டை போலாவே சிலருக்கு போட்டால் கிழிந்து போகக்கூடிய வகையில் கடினமாக இருக்கும். ஆனால் இந்த முறை மிக சீரிய முறையில் சீருடை தயார் செய்யப்பட்டுள்ளது. தனித்தனியாக அளவெடுத்து தைக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளி மாணவர்களின் உடை இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள்
6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ட்-பேண்ட், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரைக்கால் டவுசர்-சர்ட் வழங்கப்பட உள்ளது. இதில் மாணவிகளை பொறுத்த வரை 1 முதல் 4-ம் வகுப்பு வரை ஸ்கர்ட் மற்றும் சர்ட்டும், 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாவாடை-சர்ட், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு கோர்டுடன் சுடிதார் தைக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications