யூடியூபர் முக்தார் அகமது மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கணும்.. நாடார் அமைப்பினர் போர்க்கொடி
சென்னை: முன்னாள் முதல்வரும், கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் என்று போற்றப்படும் காமராஜரை பற்றி அவதூறாக பேசிய யூடியூபர் முக்தார் அகமது மீது கண்டனங்கள் குவிந்து வருகின்றன. காமராஜர் குறித்து அவதூறாக பேசிய யூடியூபரை கண்டித்து நாடார் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். முக்தார் அகமது மீது உடனடியாக தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள்.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே முக்தார் அகமதுவை கண்டித்து நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ராஜ்குமார், ஈ.சி.ஆர். நாடார் சங்கத் தலைவர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பெரம்பூர் வட்டார நாடார் சங்க தலைவர் பத்பநாபன், சத்ரிய நாடார் இயக்க தலைவர் சந்திரன் ஜெயபால், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சென்னைவாழ் நாடார் சங்கத்தலைவர் தங்கமுத்து, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன், காமராஜரின் பேத்தி கமலிகா, நாடார் மகாஜன சங்க மேன்சன் செயலாளர் மாரிமுத்து, நடிகர் பயில்வான் ரங்கநாதன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டு மக்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். தமிழ்நாட்டில் அனைவருக்கும் கல்வி கொடுத்தவர் காமராஜர். அவரை பற்றி யூடியூபர் முக்தார் அகமது அவதூறாக பேசியது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் அதிகமாக வரி கொடுக்கும் வணிகர்களை கள்ள நோட்டு அடிப்பவர்கள் என அவமானப்படுத்தும் நோக்கத்தில் முக்தார் தவறாக பேசி வருகிறார். அவர் மீது உடனடியாக தமிழக அரசு வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். எனினும் இதுவரை தமிழக அரசு முக்தார் அகமது மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
முன்னதாக இந்த பிரச்சனை தீவிரமான போது, யூடியூபர் முக்தார் அகமது மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் வெளியிட்ட பதிவில், காமராஜர் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் முக்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்தளப்பதிவில், ''வணக்கம். என்னுடைய நேருக்கு நேர் நேர்காணலில் நான் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி வழக்கம் போல் சிலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அதன் காரணமாக, நான் மதிக்கும் அந்த சமூக மக்கள் வேதனைப் படுவது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது.
காமராஜர் ஆட்சி குறித்து சில முக்கிய பிரமுகர்கள் முன் வைத்து வந்து வந்த விமர்சனங்கள் மற்றும் வெவ்வேறு சேனல்களில் தொடர்ந்து பேசப்பட்டு வந்த கருத்துக்களின் அடிப்படையில், அரசியல் பார்வையில் ஒரு பத்திரிக்கையாளராக என்னுடைய நேர்காணலில் அதை வாசித்து விளக்கம் பெற முயற்சித்தேன். எதுவும் என்னுடைய தனிப்பட்ட விமர்சனங்களோ கருத்தோ அல்ல.
நான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நோக்கில் பயணிக்கிறவன். ஆகவே என்னுடைய நேர்காணல் மூலமாக குறிப்பிட்ட சமூக மக்களின் உணர்வுகள் புண்பட்டு இருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல, நாம் ஒற்றுமையாக இருப்போம்" இவ்வாறு முக்தார் அகமது கூறியிருந்தார்












Click it and Unblock the Notifications