செந்தில் பாலாஜிக்கு அறப்போர் இயக்கம் வைத்த செக்! ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக தமிழக அரசு பதில்
சென்னை: டிரான்ஸ்பார்மர் முறைகேடு தொடர்பாக முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான புகாரில் வழக்குப் பதிவு செய்ய அனுமதி குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் 2021-2023ஆம் ஆண்டுகளில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ. 1,182 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ (Tangedco) தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால், இந்த வழக்கை உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த மனுவானது நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், "மனுதாரர் அளித்துள்ள புகார் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் முடிவெடுக்கவுள்ளனர். அதனால், இந்த மனு செல்லாததாகிவிட்டது" என வாதிட்டார்.
இந்த நிலையில், அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், "புகார் அளித்து இரு ஆண்டுகளாகிவிட்டன. அனைத்து ஆவணங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. மனு மீது விரிவான வாதங்களை முன்வைக்க விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications