கொரோனாவால் தமிழக விமான நிலையங்களில் இறுகும்பிடி.. மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.. என்னாச்சி?
சென்னை: சீனாவில் பரவி வரும் பிஎப் 7 ஓமிக்ரான் மாறுபாடு கொண்ட வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 2019ல் பரவ துவங்கியது. இந்த கொரேனா வைரஸ் உருமாறி உருமாறி பல நாடுகளை தாக்கியது. இந்தியாவும் அதிக பாதிப்பை சந்தித்தது.
சமீபகாலமாக பல நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இது இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்நிலையில் தான் மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளத.
பிஎப்.7 வகை கொரோனா வைரஸ்.. சீனைவை போல் இந்தியாவில் வேகம் காட்டுமா? ஆதார் பூனாவல்லா சொன்ன ஆறுதல்
சீனாவில் கொரோனா பாதிப்பு
சீனாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு கொண்ட பிஎப் 7 வகை வைரஸால் தான் தற்போது சீனா அதிகமாக பாதிப்பை சந்தித்து வருகிறது. தற்போதைய சூழலில் சீனாவில் 1.48 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலிகளும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்நாட்டு அரசு பாதிப்பு, பலி பற்றி விபரங்களை சரியாக வழங்காமல் உள்ளது. இதனால் குழப்பமான சூழல் உள்ளது. இருப்பினும் சீனாவில் தற்போதைய கொரோனா பாதிப்பு என்பது முந்தைய காலங்களை விட அதிகமாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கணித்து கூறியுள்ளனர்.
இந்தியாவில் பிஎப் 7 வைரஸ் பாதிப்பு
இதன் தொடர்ச்சியாக சீனாவில் கொரோனா பாதிப்பை அதிகரிக்க செய்யும் பிஎப் 7 ஓமிக்ரான் மாறுபாடு வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் குஜராத்தில் 2 பேர், ஒடிசாவில் 2 பேர் என மொத்தம் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அட்வைஸ் வழங்கி உள்ளது.
மத்திய அமைச்சர் ஆலோசனை
மேலும் இன்று டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்படுகிறது. இதனால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதோடு கொரோனா பரவல் என்பது இன்னும் முழுமையாகக் குறையவில்லை என்றும் எனவே கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். அதோடு கொரோனா தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை பொதுமக்கள் செலுத்தி கொள்ள வேண்டும் எனவும், பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.
மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
இந்நிலையில் தான் தமிழக சுகாதாரத்துறையின் இயக்குனர் செல்வ விநாயகம் சார்பில் மத்திய பொது சுகாதார பணிகள் இயக்கத்துக்கு இன்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கடிதத்தில் இருப்பது என்ன?
சீனா, ஹாங்காங்கில் இரந்து வரும் நபர்களுக்கு தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டுக்கு கொரோனா பரிசோதனை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அதன்படி தமிழ்நாட்டில் 97 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 92 சதவீதம் பேருக்கு 92 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை பொறுத்தமட்டில் தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ளது. இந்த நிலையை தொடர்ந்து தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சீனா, ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட சோதனை மீண்டும் துவக்கம்
தமிழகத்தில் விமான நிலையம் வரும் பயணிகளை பொறுத்தமட்டில் தமிழக அரசு சார்பில் உடனடியாக ஆர்டிபிசிஆர் சோதனை என்பது மேற்கொள்ள முடியாது. இதற்கு மத்திய அரசின் அனுமதி என்பது கட்டாயம் தேவை. சமீபத்தில் 2 சதவீதம் பேருக்கு மட்டும் ரேண்டமாக ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கொரோனா பரவல் என்பது தமிழகத்தில் கடந்த மாதம் ஒற்றை இலக்கமாக குறைந்தது. இதையடுத்து 2 சதவீதம் பேருக்கான ஆர்டிபிசிஆர் சோதனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தான் மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளதமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பரிசோதனைக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.