ரிசல்ட் வந்ததுமே “மெகா” புராஜெக்டை கையில் எடுக்கும் ஸ்டாலின்! ஏழைகளை மீட்கும் தாயுமானவர் திட்டம்!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கும் தாயுமானவர் திட்டம் அடுத்த மாதம், அதாவது லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 3 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர்கள், ஒற்றை பெற்றோர் குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்களை கண்டறிந்து அடிப்படை வசதி, கல்வி, வீடுகள் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்தார்.
முதல்வரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரிலான இந்த புதிய திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும் என்றும் 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.27,922 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதியுடன் தேர்தல் முழுமையாக நிறைவு பெற்று ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்றோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பங்கள் என இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை முதலில் சோதனை அடிப்படையில், ஐந்து மாவட்டங்களை தேர்வு செய்து செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில், ஏழை குடும்பங்களை எந்த அடிப்படையில், எவ்வாறு கண்டறிய வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், தாயுமானவர் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளதாகவும், முதலில் சோதனை அடிப்படையில், ஐந்து மாவட்டங்களில் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி, அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வறுமை ஒழிப்பை நோக்கமாக கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நாட்டுக்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில் பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது செயல்படுத்தப்பட இருக்கும் தாயுமானவர் திட்டம், வறுமை ஒழிப்பு முயற்சியில் மிக முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications