ஜனாதிபதி ஆட்சியை நோக்கி தமிழகம்? நிர்வாக பணிகளை தொடங்கிய ஆளுநர்.. பரபரப்பு தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் புதிய ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் புதிய அரசு அமையாத நிலையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நிர்வாக பணிகள் மேற்கொள்வதை தொடங்கி உள்ளார்.
அதன்படி முதற்கட்டமாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவின் பேரில் பிளஸ் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மூலமாக வெளியிடப்படும். ஆனால் தற்போது புதிய அரசு அமையவில்லை. துறை ரீதியிலான அமைச்சர்களும் இல்லை.

இதனால் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவுரையின்பேரில் பள்ளி கல்வித்துறை இன்று பிளஸ் 2 ரிசல்ட்டை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஆளுநர் நிர்வாக பணிகளை தொடங்கி உள்ளது உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக லோக்பவன் (ராஜ்பவன்) அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ''தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடனடியாக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உயர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் புதிய கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்கும் வரை முடிவுகள் வெளியிடுவதை நிறுத்தி வைப்பது மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை தாமதப்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, மாணவர்களின் எதிர்கால நலன் கருதி முடிவுகளை தாமதமின்றி வெளியிடுவது அவசியம் என்பதை ஆளுநர் உறுதிப்படுத்தினார்'' என கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்க 2 முறை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அனுமதி கோரியது. ஆனால் மெஜாரிட்டி இல்லை. இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவில்லை. மேலும் விஜய்க்கு வரும் 10 ம்தேதி வரை பெரும்பான்மையை நிறுவிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதற்குள் எப்படியாவது திமுக கூட்டணி கட்சிகளான விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்க விஜய் முனைப்பு காட்டி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க வரும் 10ம் தேதி வரை பொறுத்து இருப்போம். விஜய் ஆட்சி அமைக்காவிட்டால் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றி நிலையான ஆட்சிக்கான நடவடிக்கையை எடுக்கும் என்று திமுகவின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தவெக பெரும்பான்மை நிரூபிக்காவிட்டால் திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் தவெக அல்லது அதிமுக - திமுக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தால் பிரச்சனையில்லை. மாறாக யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராவிட்டால் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்வார். அதன்பிறகு 6 மாதங்கள் வரை ஜனாதிபதி ஆட்சி நடக்கும். அதன்பிறகு மீண்டும் கட்சிகளுக்கு மெஜாரிட்டி நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும் இல்லாவிட்டால் புதிதாக தேர்தல் நடத்தப்படும். இதனால் ஆட்சி அமைப்பதில் நிலவும் தற்போதைய தாமதம் தமிழ்நாட்டை ஜனாதிபதி ஆட்சியை நோக்கி அழைத்து செல்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications