திரும்ப பெற கடிதம்.. ஆளுநர் ஆர்என் ரவி திடீர் டெல்லி பயணம்.. 2 நாள் பயணத்தின் பின்னணி விஷயம் என்ன?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவி திடீரென்று இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த பயணம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்என் ரவி உள்ளார். இவர் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கும் சென்று தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார்.
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று பேசி வருகிறார். அப்போது அவர் புதிய கல்வி கொள்கை, இந்திய பொருளாதாரம், சனாதன தர்மம் பற்றி பேசி வருகிறார்.
ஓ, டீல் ஓகே?.. ரவி பச்சமுத்தா.. எடப்பாடியின் மாஸ் கூட்டணி.. திமுகவுக்கு லாபம்.. யார் சொல்றது பாருங்க
ஆளும் கட்சி-ஆளுநர் மோதல்
மேலும் பல மேடைகளில் ஆளுநர் ஆர்என் ரவி திராவிடம், சனாதன தர்மம் பற்றி பேசும் கருத்துகளுக்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுகவின் பத்திரிகையில் ஆளுநர் ஆர்என் ரவியை தாக்கி கட்டுரைகள் எழுதப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மோதல் கருத்து சார்ந்த மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
திரும்ப பெற கடிதம்
இந்நிலையில் தான் சமீபத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஆளுநர் ஆர்என் ரவி தனது அதிகார எல்லையை கடந்து செயல்பட்டு வருகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது இல்லை. இதனால் அவரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
டெல்லி சென்ற ஆளுநர்
இந்நிலையில் தான் ஆளுநர் ஆர்என் ரவி இன்று திடீரென்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் ஆர்என் ரவி டெல்லியில் புறப்பட்டு சென்றார். இவர் 2 நாள் பயணமாக திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்என் ரவி நாளை வரை டெல்லியில் இருந்தார். அதன்பிறகு நாளையே அவர் மீண்டும் டெல்லியில் இருந்து சென்னை வர உள்ளார்.
காரணம் என்ன?
தற்போது டெல்லி சென்ற ஆர்என் ரவியின் பயணம் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும் அவர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச இருக்கலாம் எனவும் மரியாதை நிமித்தமாக மத்திய அமைச்சர் யாரையாவது அவர் சந்திக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அவர் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் பேசலாம் என கருதப்படுகிறது. இதனால் ஆளுநர் ஆர்என் ரவியின் டெல்லி பயணம் தமிழக அரசியல் கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுள்ளது.