தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நீட்டிக்கப்படுவாரா அல்லது விடை பெறுவாரா.. மத்திய அரசின் திட்டம் என்ன?
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதம் நிறைவடைவதையொட்டி நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஆளுநர் ரவி நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த 2021ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். மாநில ஆளுநராக நியமிக்கப்படுபவர் ஐந்து ஆண்டுகள் வரை பதவியில் இருக்க முடியும். அதேநேரம் புதிதாக ஒருவரை நியமிக்க மத்திய அரசு விரும்பினால் அவர் பதவி எப்போது வேண்டுமானாலும் காலியாகவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஐந்து ஆண்டுகள் முடிந்தாலும் புதியவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவதும் நடக்கிறது.

அந்த வகையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இம்மாதம் 31-ந் தேதி நிறைவடைகிறது. இந்த சூழலில் அண்மையில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய உள்ளது. ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், காலியாக உள்ள தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகிய பதவிகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இதுதவிர வேறு சில மாநில கவர்னர்களின் பதவிக்காலமும் முடிவடைய போகிறது.
எனவே புதுச்சேரி, தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புதி ஆளுநர் நியமிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் டெல்லி சென்றிருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து அண்மையில் பதிவிட்டிருந்த ஆளுநர் ரவி, "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் மற்றும் மாநில மக்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து பேசினார். தமிழக மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்" என்று கூறியிருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மைக் காலத்தில் மட்டும் தமிழக அரசு நிறைவேற்றிய 13 மசோதக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பாக புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள்தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். அதேபோல் கள்ளச்சாராயம் விற்பவருக்கு அதிகப்படியான தண்டனை விதிக்கும் சட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தார். சமீப காலமாக ஆளுநர் ரவி, தமிழக அரசுடன் பெரிய அளவில் எந்த மோதல் போக்கையும் கடைபிடிக்கவில்லை.. இந்த சூழலில் ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications