ஆளுநர் மாளிகையில் மசோதாக்கள்- ஒப்புதல் தந்தது, ஜனாதிபதிக்கு போனது எத்தனை? உச்சநீதிமன்றம் பரபர தகவல்!
சென்னை: 2020-ம் ஆண்டு முதல் 181 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்துவிட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றுகிற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருக்கிறார்; மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 10-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மசோதாக்கள் நிலவரம் குறித்து ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஆளுநரின் தனிப்பட்ட முடிவு: இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத போது சட்டசபைக்கு பாதிப்பு ஏற்படும். இது சட்டசபைக்கு சொல்லப்படுகிற தவறான தகவல் என்றார். அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் குறுக்கிட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுநரின் தனிப்பட்ட முடிவு என்றார்.
152 மசோதாக்களுக்கு ஒப்புதல்: அத்துடன், 2020-ம் ஆண்டு முதல் மொத்தம் 181 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் தரப்பட்டுள்ளன. 5 மசோதாக்கள் அரசால் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. 9 மசோதாக்களை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. 5 மசோதாக்கள் பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதே எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் அதிகாரம் பறிப்பு: இந்த விசாரணையில் வாதிட்ட மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, ஆளுநர் ஒரு டெக்னிக்கல் சூப்பர்வைசர் அல்ல; ஆளுநர்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் துணைவேந்தர் நியமன மசோதாக்கள் உள்ளன. மசோதாக்களை ஆழ்ந்து பரிசீலனை செய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார். இதனையடுத்து, அப்படியானால் வழக்கை எப்போது ஒத்திவைப்பது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்ப, அட்டர்னி ஜெனரல் தரப்பில் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கலாம் என்றார். இதனை ஏற்று இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 1-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications