"ஆளுநர் மூலம் தொல்லை.. இந்திய மாநிலங்களுக்கு தமிழகம் விடுதலை பெற்று தந்துள்ளது!” முதல்வர் பெருமிதம்
சென்னை: சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழக அரசு மிகப் பெரிய விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது தொடர்பாகத் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்குச் சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கால வரையறையும் நிர்ணயம் செய்யப்பட்டது. இது மிக முக்கியமான தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவேதி, வில்சன் ஆகியோருக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
ஆளுநர்கள் மூலம் தொல்லை
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இதைப் பாராட்டு விழா என்பதை விட வெற்றி விழா எனச் சொல்வதே சரியாக இருக்கும். இந்திய சட்ட வரலாற்றில் இதுவரை எந்த மாநிலமும் பெற்றிடாத இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களைப் பாராட்டுகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்தத் தொல்லைகள் கொடுக்கின்ற காலத்தில் மிக முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழகத்திற்கு மட்டும் கிடைத்த வெற்றி இல்லை. மக்களாட்சிக்கும் மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி! ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி!
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்
"அரசியல் சாசனப் பிரிவு 142ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது- "இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது" என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு வணக்கம் செலுத்தியது!
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்றுச் சாசனமாக இந்தத் தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். இது இந்திய மாநிலங்களுக்குத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்றுத்தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை!
பாராட்டு
இந்த அரசியல் உரிமையை சட்டப்பூர்வமான வாதங்களின் மூலமாகத் தமிழ்நாடு அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்குச் சொந்தக்காரர்களான வழக்கறிஞர்கள்தான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று சொல்லி ஒவ்வொரு வழக்கறிஞர்களையும் பாராட்டினார்.
இந்திய மக்களுக்குக் கிடைத்த வெற்றி
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "அறிவிற்சிறந்த வழக்கறிஞர் பெருமக்களே.. உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வெற்றியும் பெற்றிருப்பீர்கள். தனிநபர்கள் - அமைப்புகள் -ஏன், தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி! இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும். இந்த வழக்கும் - வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்!
மாநில சுயாட்சி குழு
வழக்குத் தாக்கல் செய்த தமிழ்நாடும் வாதிட்ட நீங்களும் தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி! இந்தத் தீர்ப்பு கொடுத்திருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக்கிறோம்!
இந்திய ஜனநாயகத்தில் மக்களாட்சிக்கு வலுசேர்க்க, அண்ணா வலியுறுத்தி, கருணாநிதி முழக்கமாக வடித்துக் கொடுத்ததுதான் "மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி" என்ற இலக்கு! அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது! மாநில சுயாட்சியைப் பெறுவோம்" என்றார்..












Click it and Unblock the Notifications