டெலிவரி ஊழியர்களுக்கு யோகம் தான்.. இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20000 மானியம்! தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: நலவாரியத்தில் பதிவு செய்த இணையம் சார்ந்த சேவை மற்றும் டெலிவரி தொழிலாளர்களுக்கு புதிய மின்சார இருசக்கர வாகனம் வாங்க தலா 20000 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பதிவும் தொடங்கிய நிலையில் தற்போது இந்தத் திட்டத்திற்கு என நான்கு கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
உலகமே ஆன்லைனில் சுருங்கி விட்ட நிலையில் உணவு வர்த்தகம் என பல துறைகள் ஆன்லைன் மயமாகிவிட்டது குறிப்பாக ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்களும், ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களும் பெரு வளர்ச்சி கண்டு வருகின்றன.
இவற்றிற்கெல்லாம் ஆணிவேராய் இருப்பது டெலிவரி நபர்கள் தான். நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து பயனர்கள் ஆர்டர் செய்த பொருட்களை பத்திரமாக கொண்டு போய் சேர்க்கின்றனர்.

அதே நேரத்தில் பெட்ரோல் வாகனங்களால் அவர்களுக்கு நிறைய சிரமம் ஏற்படும் நிலையில் மின்சார ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய அளவில் அவர்களுக்கு பயன்படும். இந்த நிலையில் கடந்த 2025 -26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டில் நலவாரியத்தில் பதிவு செய்த 2000 இணையம் சார்ந்த சேவை பணி மற்றும் டெலிவரி தொழிலாளர்களுக்கு புதிதாக இருசக்கர மின்வாகனம் வாங்கும் பொருட்டு தலா 20,000 மானியமாக வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
தொடர்ந்து டெலிவரி மற்றும் இணைய பணி சார்ந்த தொழிலாளர்களுக்காக தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்பு தொழிலாளர்கள் நலவாரியமும் உருவாக்கப்பட்டது. இந்த நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே 2000 பேருக்கு இந்த நிதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த நல வாரியத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களின் தகுதியின் அடிப்படையில் 2000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க நான்கு கோடி ரூபாய் நிதியானது ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் மூலம் விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிற ஆவணங்களை கொண்டு தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications