Tamil Nadu: நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு.. பொதுமக்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை: நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இந்த அரசாணை மூலம் சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வாரி மனை என மாற்றம் செய்து நில உடமைதாரர் பெயரில் பட்டா வழங்கப்படும். வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி திட்ட தனி வட்டாட்சியருக்கு அதிகாரம் தந்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நத்தம் நிலங்களில் வசித்து வருபவருக்கு பட்டா வழங்கும் திட்டம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் கட்ட ஒதுக்கப்படும் குடியிருப்பு பகுதிகள் வருவாய்த் துறையால் நத்தம் நிலமாக வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஊரகப்பகுதியில் மட்டும் நிலவரி திட்ட நடைமுறைகளை பின்பற்றி நத்தம் நிலங்களை ராயத்துவாரி மனைகளாக மாற்றி பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை போன்ற நகர்ப்புற பகுதிகளில் நகர நிலவரி திட்டம் வாயிலாக இந்த மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். அரசின் அனுமதி இல்லாததால் இப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் 'அ' பதிவேட்டில் கிராம நத்தம் நத்தம் வீட்டு மனை என்று நிலங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த நிலங்கள் நகர நில அளவை பதிவேட்டில் சர்க்கார் புறம்போக்கு எனவும் அடங்கலில் நத்தம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
எனவே பகுதிகளில் நகர நிலவரைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு நில உரிமையாளர்கள் பட்டா வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை எழுப்பியிருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது நகர நிலவரித் திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications