'அவசர' ஆலோசனை.. ஹோட்டல்களைக் காப்பாற்றுமா தமிழக அரசு? நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்!
சென்னை: ஈரான் போர் ஏற்படுத்திய எல்.பி.ஜி தட்டுப்பாடு, தமிழகத்தின் உணவகத் தொழிலை ஒரு 'இரண்டாவது லாக்டவுன்' போன்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. "இன்னும் இரண்டு நாட்களுக்கு மேல் அடுப்பு எரியாது" என்று ஹோட்டல் உரிமையாளர்கள் கதறத் தொடங்கிய நிலையில், தமிழக அரசு இன்று போர்க்கால அடிப்படையில் அதிரடி ஆலோசனையில் இறங்கியுள்ளது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்தது என்ன?
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் இந்த முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் சென்னை உணவக உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் முன்வைக்கப்படும் முக்கியக் கோரிக்கைகள்:
அத்தியாவசியச் சேவை அந்தஸ்து: உணவகங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு விநியோகத்தை 'அத்தியாவசியச் சேவையாக' (Essential Services) அறிவிக்க வேண்டும்.
விறகு அடுப்புக்கு அனுமதி: தற்காலிகமாகச் சில குறிப்பிட்ட இடங்களில் விறகு அடுப்புகளைப் பயன்படுத்தி உணவு சமைக்க அனுமதி வழங்க வேண்டும். குறிப்பாகச் சென்னை போன்ற பெருநகரங்களில் இதற்கான சிறப்பு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படும்.
மின்சார அடுப்பு மானியம்: உடனடி மாற்றாக 'கமர்ஷியல் இண்டக்ஷன்' (Commercial Induction) அடுப்புகளுக்கு மாற அரசு மின்சாரக் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்படும்.
முதல்வரின் 'டெல்லி' கடிதம்
இந்த ஆலோசனைக்கு முன்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "மத்திய அரசின் 'முன்னுரிமைப் பட்டியலில்' (Priority List) வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு இணையாக ஹோட்டல்களையும் சேர்க்க வேண்டும். இல்லையெனில், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, விவசாய விளைபொருட்களின் விற்பனையும் தேக்கமடையும்" என்று கவலை தெரிவித்துள்ளார்.
முடங்கும் மும்பை... தவிக்கும் சென்னை!
"இன்னும் இரண்டு நாட்களில் நிலைமை சீரடையவில்லை என்றால், 50 சதவீத ஹோட்டல்கள் மூடப்படும்" என எச்சரிக்கிறது மும்பை ஹோட்டல்கள் சங்கமான 'ஆஹார்' (AHAR). ஏற்கனவே தாதர், அந்தேரி பகுதிகளில் பல உணவகங்கள் மெனு கார்டுகளைச் சுருக்கிவிட்டன.
சென்னை நிலைமையும் சற்றும் குறையவில்லை. "கமர்ஷியல் சிலிண்டர் விநியோகிப்பாளர்கள் ஸ்டாக் இல்லை என்று கைவிரித்துவிட்டனர்" என பெட்ரோலியத் துறை அமைச்சருக்குச் சென்னை ஹோட்டல் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. புகழ்பெற்ற 'அன்னபூர்ணா' ஹோட்டல் தனது கிளைகளில் சில உணவுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சென்னையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் இன்று முக்கியமான உணவகங்கள் மூடப்படும் வாய்ப்புகள் உள்ளன. பல வெஜிடேரியன், நான் வெஜிடேரியன் உணவகங்கள் மூடப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய கள நிலவரம் - ஒரு பார்வை
தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களில் பல மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஆப்பம், ப்ரைடு ரைஸ் போன்ற அதிக எரிவாயு தேவைப்படும் உணவுகள் பல ஹோட்டல்களில் மெனுவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன. சில உணவகங்கள் மாலை 4 மணி முதல் 7 மணி வரை சிற்றுண்டி வழங்குவதை நிறுத்திவிட்டு, காபி மற்றும் டீயுடன் மட்டும் காலத்தைக் கடத்தி வருகின்றன.
மேலும், நிலைமை சீராகவில்லை என்றால் கடைகளை மூட வேண்டிய சூழல் வரும் என்பதால், தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
"வீட்டு அடுப்புகளை அணையாமல் பார்த்துக்கொள்ளும் அரசு, அந்த வீடுகளுக்கே உணவு சமைத்து வழங்கும் எங்கள் அடுப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்பதே இப்போது வியாபாரிகளின் ஒற்றைக் குரலாக இருக்கிறது.
தமிழக அரசின் இந்தத் தலையீடு மத்திய அரசை அசைக்குமா? அல்லது தமிழகத்தின் 'விறகு அடுப்பு' கோரிக்கைக்குப் பச்சைக்கொடி காட்டப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications