விஜயபாஸ்கர் குட்கா வழக்கு: மீண்டும் அவகாசம் கேட்ட சிபிஐ.. விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் தொடர்புடைய குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என கோரி சிபிஐ கால அவகாசம் கோரியதால் வழக்கின் விசாரணை 11 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் குட்கா பொருட்கள் விற்பனைக்கும் கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்கும் தடை விதிக்கபட்டது. ஆனால் இந்த தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய அப்போதைய தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது.
அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் பழனி, செந்தில்வேலவன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.
இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் வழக்கு பதிவு செய்த சிபிஐ, கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கைது செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி சிபிஐ போலீசார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்ட மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேர்க்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு (2022) ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் உள்ளது. எனவே, அதனை திருத்தம் செய்து வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் குறித்த விபரங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை சிபிஐக்கு திரும்ப அளித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கின் அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தயாராகி விட்டதா என சிபிஐ காவல்துறையிடம் கேள்வி எழுப்பினார். சிபிஐ தரப்பில், இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று காரணத்தை கூறி கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் இன்றைய விசாரணை வரை 11 முறை (டிசம்பர் 15, ஜனவரி 10, பிப்ரவரி 6,17, மார்ச் 20, ஏப்ரல் 18,25 மே 11 ஜூன் 3, 26) வழக்கு விசாரணையை சிபிஐ தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications