கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பம், ரூ.50 ஆயிரம் நிதி உதவி பெறுவது எப்படி? தமிழக அரசு விளக்கம்
சென்னை: கொரோனாவால் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.
இந்த உதவித் தொகையை எப்படி பெறுவது என்பது தொடர்பான அறிவிப்பை அரசு இன்று வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாகவே, பாதிக்கப்பட்டோர்கள், நிவாரணத் தொகை கேட்டு விண்ணப்பிக்க எளிதான வழி வகை செய்யப்பட்டுள்ளது.

பிரமாணப் பத்திரம்
கொரோனா நிவாரணம் வழங்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் இருந்தபோது, இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மாநில அரசுகள் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நிவாரணத் தொகை
இதைத் தொடர்ந்த சில மாநிலங்கள் இழப்பீடு தொகையை வழங்க ஆரம்பித்தன. அதேநேரம், தமிழக அரசு இதுபோன்ற இழப்பீட்டு தொகையை வழங்காமல் இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று, தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த நிவாரணத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நீதிபதிகள் அப்போது உத்தரவிட்டிருந்தனர்.

50 ஆயிரம் நிதி நிவாரணம்
இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வழங்குவது தொடர்பாக, நேற்று, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு அதில் தெரிவித்துள்ளது.

யாருக்கு பொருந்தாது
முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்று, அரசு தெரிவித்திருந்தது.

விண்ணப்பம்
இந்த நிலையில், நிதியுதவி பெறும் வழி முறை குறித்து இன்று அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/ (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் "வாட்ஸ் நியூ (what's new) பகுதியில் "Ex-Gratia for Covid-19" என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகை பெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications