தூக்கியடிக்கப்பட்ட உதயச்சந்திரன்.. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது ஏன்? வெளியான தகவல்
சென்னை: தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்று சில நாட்களே ஆகியுள்ள நிலையில், இன்று முக்கியமான உத்தரவுகள் வந்துள்ளது. பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக திமுக ஆட்சியில் பவர்ஃபுல்லாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன், இப்போது எந்தப் பொறுப்பும் இன்றி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இன்றைய தினம் தமிழ்நாடு அரசு சார்பில் பல முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் குறித்த உத்தரவுகள் வெளியானது. வருவாய்த் துறை நிர்வாக ஆணையராக முன்னாள் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித் துறைச் செயலாளராக சித்திக், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நிதித்துறை செயலராக இருந்த உதயச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

உதயச்சந்திரன்
ஸ்டாலின் ஆட்சி காலத்தில் கோட்டையின் மிக முக்கியமான சக்தியாக வலம் வந்தவர் உதயச்சந்திரன். பல விஷயங்களில் உதயச்சந்திரன் எடுக்கும் முடிவுகளே இறுதியானது என்ற அளவுக்கே உதயச்சந்தின் மீது அன்றைய முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், இன்று விஜய் முதலமைச்சராக அமர்ந்ததும் வெளியான முதல் நிர்வாக மாற்றத்திலேயே உதயச்சந்திரன் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அவர் எந்தவொரு பொறுப்பும் இல்லாமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உதயச்சந்திரனின் வரலாறு ஒரு சுவாரஸ்யமான 'ரோலர் கோஸ்டர்' பயணம் என்றே சொல்லலாம். அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக அவர் சிறப்பாகச் செயல்பட்டபோது, அவருக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், அப்போதைய அதிமுக அமைச்சர் செங்கோட்டையனுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது 'தன்னிச்சையான' செயல்பாடுகள் பிடிக்கவில்லை. இதனால் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்க 'முதன்மைச் செயலாளர்' என்ற புதிய பதவியை உருவாக்கி, அதற்கு பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டார்.
விமர்சனம்
ஆனால், திமுக ஆட்சியில் ஸ்டாலின் அவரைத் தனது தனிச் செயலாளராக நியமித்தார். அதன் பிறகு நிதித்துறைக்கும் செயலாளராக நியமிக்கப்பட்டார். பொதுவாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான் திமுகவின் பிரதான ஓட்டு வங்கி. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக அவர்கள் நடத்திய போராட்டங்களைத் திமுக அரசு கையாண்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதன் பின்னணியில் நிதித்துறை செயலாளராக இருந்த உதயச்சந்திரனின் 'கறார்' போக்கே காரணம் என்பது அரசு ஊழியர்களின் குற்றச்சாட்டு.
அரசு ஊழியர்கள்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்காதவர் உதயச்சந்திரன் என்று குமுறிய ஆசிரியர்கள், இப்போது அவர் மாற்றப்பட்ட செய்தியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், "உதயசூரியனை முடித்த உதயச்சந்திரன்" என்று அவரது போட்டோவுடன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உதயச்சந்திரனின் பிடிவாதமே திமுகவிற்கு அரசு ஊழியர்களின் ஆதரவைப் பறித்துவிட்டது என்பதும் திமுக ஆதரவு நெட்டிசன்களின் பேச்சாக உள்ளது.
இணைய உபி-க்கள்
நிர்வாகத்தில் நேர்மையானவர், திறமையானவர் என்று பெயர் எடுத்தாலும், மக்கள் பிரதிநிதிகளை விட அதிகாரிகளின் கரம் ஓங்கியிருக்கக்கூடாது என்று திமுக ஆட்சியிலேயே இணைய உபிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தன. இருப்பினும், திமுக ஆட்சியில் உதயச்சந்தின் மாற்றப்படாமல் இருந்தார். இந்தச் சூழலில் விஜய் வந்தவுடன் அவர் மாற்றப்பட்டுள்ளார். உதயச்சந்திரனின் 'வெயிட்டிங் லிஸ்ட்' ஒருபுறம் இருக்க.. அடுத்து யாரெல்லாம் தூக்கியடிக்கப்படப் போகிறார்கள் என்பதே அடுத்து எழும் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications