7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி இப்போது மொத்தம் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை காவல் ஆணையராக கபில்குமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை போக்குவரத்து இணை ஆணையராகப் பகலவன், சென்னை மேற்கு சட்ட ஒழுங்கு இணை ஆணையராக திஷா மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எப்போதுமே புதிய அரசு அமையும் போது ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கம். நிர்வாக காரணங்களுக்காக இதுபோன்ற பணியிட மாற்றங்கள் செய்யப்படும். தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிட மாற்றத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். பொறுமையாகவே தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

அதிரடி மாற்றம்
இதற்கிடையே இப்போது 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்த தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை காவல் ஆணையராக கபில்குமார் சரத்கரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல ரயில்வே ஐஜியாக அமிஷேக் தீக்சித், நெல்லை சரக டிஐஜியாக திருநாவுக்கரசு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சென்னை போக்குவரத்து இணை ஆணையராகப் பகலவன், சென்னை மேற்கு சட்ட ஒழுங்கு இணை ஆணையராக திஷா மிட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முழு விவரம்
- தாம்பரம் பெருநகர காவல் துறையின் கூடுதல் காவல் ஆணையராக (போக்குவரத்து மற்றும் தலைமையகம்) பணியாற்றி வந்த கபில் குமார் சி சரத்கர், தற்போது மதுரை மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த அபிஷேக் தீக்சித் சென்னைக்கு மாற்றப்பட்டு, காலியாக உள்ள ரயில்வே ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பணியிடம் ஒதுக்கப்படாமல் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அதிகாரிகளுக்குத் தற்போது முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த டாக்டர் ஜெ. லோகநாதன், காலியாக உள்ள சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- அதேபோல காத்திருப்போர் பட்டியலில் இருந்த டாக்டர் ஆர். திருநாவுக்கரசு, நெல்லைச் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மற்றொரு அதிகாரியான பி. பகலவன், காத்திருப்போர் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் துறையின் தெற்கு போக்குவரத்து இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை பெருநகர காவல் துறையின் வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக இருந்த திஷா மிட்டல், தற்போது சென்னை மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராகப் பணியாற்றி வந்த பண்டி கங்காதர் தற்போது தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் புகையிலை நிறுவனத்தின் முதன்மை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications