3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.. எ வ வேலு வெளியிட போகும் அறிவிப்பு
சென்னை: 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இன்றைக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற இருக்கிறது. சட்டசபையில் கடந்த மார்ச் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அடுத்தடுத்து மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் விவாதத்தில் அமைச்சர் எவ வேலு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 14ம் தேதி தொடங்கியது. சட்டசபையில் அன்றைக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதனை தொடர்ந்து மறுநாள் மார்ச் 15ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் பட்ஜெட் மீதான விவாதம், மார்ச் 17 முதல், 21ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, மார்ச் 24 முதல் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த வாரத்தில் நடந்த மானியக்கோரிக்கையில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேசுவார்கள். அவற்றுக்கு துறை வாரியாக அமைச்சர்கள் பதில் அளித்து பேசினார்கள். வெள்ளிக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்டு வளர்ச்சி துறை உள்பட சில துறைகளின் மானியக்கோரிக்கை விவாதங்கள் நடந்தது.
இந்நிலையில் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து மூன்று நாள் விடுமுறையை தொடர்ந்து இன்று மீண்டும் சட்டசபை கூடுகிறது. இன்றும் கூடும் சட்டசபையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணிப் துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் எவ வேலு பதில் அளிக்க உள்ளார். விவாதத்திற்கு பதில் அளித்த பின்னர் புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர் வேலு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மார்ச் 24-ம் தேதி தொடங்கிய மானிய கோரிக்கை வாதம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications