தொகுதி மறுவரை.. 8 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கும் தமிழகம்! தென்மாநிலங்களின் நிலை இதுதான்! ஷாக் தகவல்
சென்னை: மக்கள் தொகை அடிப்படையில் 2026ம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது தமிழகத்தில் இருந்து 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் குறையும் தொகுதிகள் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 543 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் லோக்சபாவில் எம்பிக்களுக்கான இருக்கை என்பது 888 என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசுதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் வரும் 2026ம் ஆண்டு வரை எம்பிக்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ய முடியாத நிலை உள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு, அரசியல் சாசன திருத்தம் செய்தது தான் இதற்கு காரணமாகும்.
இருப்பினும் 2026ம் ஆண்டுக்கு பிறகு எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். இதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் தற்போதே விவாதம் கிளம்பிவிட்டது. மேலும் இந்த தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் தென்மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்படுத்தும் திட்டங்களை இந்த 5 மாநிலங்கள் முறையாக பின்பற்றிய நிலையில் வரும் காலத்தில் நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது.
மாறாக வடமாநிலங்களில் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்க உள்ளது. இதனால் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை செய்வதை கைவிட வேண்டும் என தென்மாநில கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் 2026ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையை செய்தால் தென்மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட உள்ளதாக கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ‛இந்தியா டூடே' செய்தி நிறுவனம் கார்டாக வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதன்படி பார்த்தால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அதிகபட்சமாக தலா 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் அது 31 என குறையும். கேரளாவில் 20 தொகுதிகள் இருக்கும் நிலையில் அது 12 ஆகவும், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அவை தலா 34 தொகுதிகளாகவும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு வங்கத்தில் 42 தொகுதி என்பது 4 குறைந்து 38 ஆகவும், ஒடிசா நாடாளுமன்ற தொகுதி 21ல் இருந்து 3 குறைந்து 18 ஆகவும், கர்நாடகா 28 நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 2 குறைந்து 26 ஆகவும், இமாச்சல பிரதேசம் 4 தொகுதியில் இருந்து 3 ஆகவும், பஞ்சாப் 13ல் இருந்து 12 ஆகவும், உத்தரகாண்ட் 5ல் இருந்து 4 ஆகவும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அசாம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், குஜராத் ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, சத்தீஸ்கார் மாநிலங்களில் நாடாளுமன்ற தேர்தல்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்சாக உத்தர பிரதேசத்தில் 11 தொகுதிகளிலும், பீகாரில் 10 தொகுதிகளும் அதிகரிக்கலாம் என இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications