ஹிஜாப்பை கழற்ற சொல்லி.. மேலூரில் "வாங்கிக்கட்டிக்கொண்ட" பாஜக.. டெபாசிட் மொத்தமா காலி! திமுக வெற்றி!
மதுரை: பாஜக முகவரால் ஹிஜாப்பை கழற்றச்சொன்ன மேலூர் நகராட்சி 8வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதுவரை 21 மாநகராட்சிகளில் அனைத்திலும் திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. சிவகாசியில் மட்டும் கடும் போட்டி நிலவி வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி திமுக சென்று கொண்டு இருக்கிறது. சென்னை, கொங்கு மாவட்டங்களை திமுக மொத்தமாக கைப்பற்றும் நிலை உள்ளது.

ஹிஜாப்
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது மேலூரில் ஹிஜாப் அணிந்த வாக்காளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பாஜக முகவர் கிரிராஜன் வெளியேற்றப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றும்படி அந்த பாஜக முகவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலூர் தேர்தல்
ஹிஜாப் அணிந்து வந்தால் எப்படி முகம் தெரியும். வாக்களிப்பவரின் முகத்தை பார்த்தால் தானே வாக்களிக்க அனுமதிக்க முடியும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு ஹிஜாப் அணிந்து வந்து கள்ள ஓட்டு போடுவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்தார். பாஜக பிரமுகர் கிரிராஜன் அங்கு கோஷம் எழுப்பி வந்த நிலையில் அவர் தேர்தல் அதிகாரிகள் மூலம் வாக்கு சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பாஜக தோல்வி
இதற்கு பாஜகவினர் சிலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பாஜக முகவரால் ஹிஜாப்பை கழற்றச்சொன்ன மேலூர் நகராட்சி 8வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 8 வது வார்டில் திமுக நகரச் செயலாளர் யாசீன் போட்டியிட்ட நிலையில் அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் டெபாசிட் இழந்தார். அதிமுக இங்கு இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

கிரிராஜன்
முன்னதாக ஹிஜாப் விவகாரத்தில் பாஜக பிரமுகர் கிரிராஜன் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. மற்றொரு மதத்தைச் சேர்ந்தவரை இழிவுபடுத்தும் படி பேசுதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

தேர்தல் ஆணையம்
முன்னதாக ஹிஜாப் அணிந்த வாக்காளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக நிர்வாகி குறித்து மாநில தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கத்தில் ஹிஜாப் அணிந்த வாக்காளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எந்த உடையணிந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறியது குறிப்பிடத்தக்கது. .












Click it and Unblock the Notifications