Tamil nadu Schools: பொங்கலுக்கு பிறகு.. 10 to 12ம் வகுப்பு வரையும் ஆன்லைன் கிளாஸ்தானா? வெளியான தகவல்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பிறகு செயல்படுத்துவதற்காக, ஒரு கொள்கை முடிவை தமிழக பள்ளிக் கல்வித் துறை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கொரோனா 3-ஆவது அலை உச்சத்தில் இருக்கிறது. இதனால் பாதிப்புகள் விறுவிறு என ஏறி வருகின்றன. சென்னையில் ஒரு நாள் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அது போல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் தினசரி கொரோன பாதிப்பு 12 ஆயிரம், 13 ஆயிரம், 14 ஆயிரம் என அதிகரித்துள்ளது.
இத்துடன் ஓமிக்ரான் பாதிப்பும் தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தியேட்டர்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், துணிக் கடைகள், நகைக் கடைகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி என்று அறிவித்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் ஆல் பாஸ்? அரசு தீவிர ஆலோசனை.. வெளியான பரபர தகவல்
பள்ளிகளுக்கு விடுமுறை
அது போல் பள்ளிக் கல்வி, உயர் கல்வித் துறை விஷயத்தில் ஒரு முடிவை அறிவித்துள்ளது. அதாவது பள்ளிகளை பொறுத்தவரையில், மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் வகுப்பு
அதேசமயம், பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
கட்டாயமில்லை
இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, 10 முதல் 12 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுவதாகவும், நேரடி வகுப்புகள் நடத்துவதும், கலந்து கொள்வதும் கட்டாயமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
பள்ளிகளே முடிவெடுக்கலாம்
மேலும், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளிகள் முடிவெடுக்கலாம் என்று கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை
மருத்துவக் கல்லூரிகளை தவிர இதர கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பு கருதி ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது என்பதால் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை நேற்றைய சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.