மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் செல்வம், 'ஒரு லட்சம் வாக்குகளை திமுக திட்டமிட்டு நீக்கி இருப்பதாக' கூறினார். மேலும் அவர் லோக்சபா தேர்தல் மூலமாக மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலையை திமுக செய்துள்ளது என்று தெரிவித்தார்.
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் வினோஜ் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். ஒரு லட்சம் வாக்குகளை திமுக திட்டமிட்டு நீக்கி இருப்பதாக வினோஜ் செல்வம் கூறினார். இது தொடர்பாக வினோஜ் பி செல்வம் கூறியதாவது:-

லோக்சபா தேர்தல் மூலமாக மீண்டும் ஒரு ஜனநாயக படுகொலையை திராவிட முன்னேற்ற கழகம் செய்துள்ளது. பல இடங்களில் மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு வாக்களிக்க வந்தார்கள். ஆனாலும் பெயர்கள் பெரிய அளவில் நீக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பூத்தில் 70 - 80 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
1,300 பூத்திற்கு கணக்கெடுத்தீர்கள் என்றால் ஒரு லட்சம் ஓட்டுக்கள் வரை மிஸ் ஆகியுள்ளது. எல்லாமே குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு (திமுக) வாக்குகள் வராது என எதையெல்லாம் நினைத்தார்களோ அந்த வாக்குகளை எல்லாம் நீக்கியுள்ளார்கள். வீடு வீடாக சென்ற அதிகாரிகள் என்ன பண்ணினார்களோ தெரியவில்லை.
அவர்கள் எந்த அடிப்படையில் நீக்கினார்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் சில வீடுகளில் பார்த்தால் ஒரே மையத்தில் ஓட்டு போடக்கூடிய கணவன் மனைவியில் கணவன் பெயர் உள்ளது. மனைவி பெயர் இல்லை. சில வீடுகளில் இரண்டு பேர் பெயருமே இல்லை. எந்த அடிப்படையில் பி.எல்.ஓஸ்கள் செய்தார்கள்.. எந்த அடிப்படையில் நீக்கினார்கள்? என்ற விளக்கம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பாக வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் அவரை எதிர்த்து திமுகவில் தயாநிதி மாறன், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும் போட்டியிடுகிறார்கள்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இதே குற்றச்சாட்டை கோவையில் முன்வைத்தார். அண்ணாமலை கூறுகையில், 'கோவை லோக்சபா தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை. தேர்தல் மேலிட பார்வையாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் பாஜக சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஒரு லட்சம் ஓட்டுகளுக்கு யார் பதில் சொல்வார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. வெளி மாவட்டங்களை ஒப்பிடும் போது சென்னையில் வழக்கம் போல இந்த முறையும் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. தமிழகத்தில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications