தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை! 'கொடுத்து வைத்த' 9 மாவட்டங்கள்.. அப்டேட் தந்த வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் அக்னி வெயில் தொடங்கியுள்ள நிலையில் அனல் மக்களை வாட்டியெடுத்து வருகிறது. இருப்பினும் சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அக்னி வெயில் தொடங்கியதிலிருந்து மக்கள் கடுமையாக அவதியுற்று வருகின்றனர். கண் எரிச்சல், தலை சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பாதிப்புகள் இந்த வெயிலால் ஏற்படுகிறது. ஏற்கெனவே அக்னி தொடங்குவதற்கு முன்னர் மாநிலத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது வெயிலுடன் சேர்த்து அனல் காற்றும் வாட்டியெடுத்து வருகிறது. மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகள் கூட வெயிலுக்கு அல்லல்பட தொடங்கியுள்ளன.

இருப்பினும் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் சற்று ஆசுவாசமடைந்துள்ளனர். இன்றைய நிலவரத்தை பொறுத்த அளவில் சென்னை உள்ளிட்ட இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. வட மாவட்டங்களில் வெயில் சற்று குறைந்தாலும் கூட அனல் காற்று அதே அளவில் வீசிக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும், திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட வட மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக வலுப்பெரும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் ஐஸ் கட்டியை வார்த்துள்ளது. அதாவது, "தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 6ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன்காரணமாக அப்பகுதிகளில் 7ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது 8ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
இதன்காரணமாக, இன்று, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 6ம் தேதி முதல் 9ம் தேதி, வரையிலான 4 நாட்களுக்கு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக வலுபெறக்கூடும் என்பதால், இன்று (மே 06) நாளை, நாளை மறுநாள் மற்றும் 9-ம் தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 70 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துப்படுகிறார்கள்" என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications