’ஆடு’ நனையுதே! ஆவின் பாலில் ஆவி தானே வரனும்..காவி எதுக்கு? அண்ணாமலைக்கு பால் முகவர்கள் சங்கம் கேள்வி
சென்னை : ஆவின் வண்ணத்தை வைத்து அரசியல் செய்வது, ஆடு நனைவதாக கூறி ஓநாய் அழுத கதை போல உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழக பால் முகவர்கள் சங்கம் கடுமையாக விமர்சித்து கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள கடித்தத்தில்,'தமிழக பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம். தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினுடைய செயல்பாடுகள் குறித்து தாங்கள் தமிழக அரசை விமர்சனம் செய்வதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.
ஏனெனில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் பரிசு பெட்டகத்தில் உற்பத்தியே செய்யப்படாத ஆவின் ஹெல்த் மிக்ஸ் மூலம் மிகப்பெரிய அளவில் நடைபெற இருந்த முறைகேடு தங்களின் அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்ததால் ஆவினுக்கும், தமிழக அரசுக்கும் ஏற்பட இருந்த பலகோடி ரூபாய் இழப்பை தடுத்து நிறுத்த ஒரு காரணமாக அமைந்தது.

ஆவின் பால்
அதே சமயம் "ஆரஞ்சு" நிற பாக்கெட்டில் வரும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் விற்பனையில் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, அதே அளவில் திடசத்தும், சற்றே கூடுதல் அளவு கொழுப்பு சத்தும் உள்ள, அதிக விலையுள்ள "சிவப்பு" நிறம் கொண்ட "டீ மேட்" பால் விற்பனையை கட்டாயப்படுத்தும் ஆவின் நிர்வாகத்தை கண்டிப்பதாக கூறி "காவி" நிறம் கொண்ட "ஆரஞ்சு" நிறத்தை தவிர்க்க "சிவப்பு" வண்ணம் கொண்ட பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய தமிழக அரசு முயல்கிறது எனும் அர்த்தம் தொணிக்கும் வகையில் "ஆளும் அரசுக்கு ஆரஞ்சு வண்ணத்திற்கு (காவிக்கு) பெருகி வரும் மக்கள் ஆதரவு அதிக வெறுப்பாகி விட்டது போல, அதனால் சிவப்பு வண்ணத்தை அதிகமாக வெளியிட்டு, மக்கள் விரும்பாத சத்து குறைவான சிவப்பு வண்ணத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்" என அக்டோபர் 14ம் தேதி நீங்கள் அறிக்கை வெளியிட்டிருப்பது "ஆடு நனைவதாக கூறி ஓநாய் அழுத கதை போல" உள்ளது.

பால் தட்டுப்பாடு
விலை குறைந்த பாலினை தட்டுப்பாடாக்கி, அதே அளவு சத்து கொண்ட அதிக விலையுள்ள பாலினை விற்பனை செய்வதை கண்டிக்காமல் வண்ணத்தை வைத்து கண்டனம் தெரிவிக்கும் தங்களின் அறிக்கையை மக்கள் நலனுக்கு எதிரானதாகவே பார்க்கிறோம். மேலும் அரசியல்வாதிகள் தங்களின் அறிக்கை போதைக்கு பால்வளத்துறையை ஊறுகாயாக பயன்படுத்த நினைப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எச்சரிக்கை
ஆவினோ, தனியாரோ பால் பாக்கெட்டுகளுடைய வண்ணங்களை வைத்தோ, பண்டிகைகால வாழ்த்துச் செய்திகளை வைத்தோ அதற்கு சாதி, மத சாயம் பூசி அரசியல் செய்ய நினைத்து மக்கள் மனங்களில் விஷம பிரச்சாரம் செய்வதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஒருபோதும் அனுமதிக்காது, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு கண்டும், காணாதது போலும் செல்லாது என்பதை எச்சரிக்கையாகவே பதிவு செய்ய விரும்புகிறோம்.

தவறான நிர்வாகம்
ஆவினுடைய தவறான நிர்வாகத்தை மக்கள் நலன் சார்ந்து மட்டுமே கண்டித்திருந்தால், மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் வீழ்ச்சியடைந்து விடக்கூடாது, வளர்ச்சியடைய வேண்டும் என ஆக்கபூர்வமான பணிகளை நீங்கள் முன்னெடுத்திருந்தால் உங்களுடைய செயல் உண்மையிலேயே பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். இல்லை என்றால் நீங்கள் கூறுகின்ற ஆவின் தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications