எரிஞ்சு விழக் கூடாது.. குணமா சொல்லனும்! ரேசன் கடை ஊழியர்களுக்குப் பறந்த உத்தரவு! ஸ்பாட்டில் அமைச்சர்
ராணிப்பேட்டை: ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் ஊழியர்கள் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மக்கள் பயன்படுத்த முடியாத தரத்தில் பொருட்கள் இருந்தால் அதை ஏற்கக் கூடாது. ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வர வேண்டுமெனவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கற்பகம் ரேஷன் கடையில் அமைச்சர் காந்திராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தரம் மற்றும் எடையை நேரில் பரிசோதித்தார்.

அமைச்சர் ஆய்வு நடத்த வந்ததை அறிந்த பொதுமக்களும் தங்களது குறைகளை நேரடியாக தெரிவித்தனர். சிலர் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், சில இடங்களில் தரம் குறித்த புகார்கள் இருப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்களிடம் பேசிய அமைச்சர் காந்திராஜ், "குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான எடையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இதில் எந்த விதமான தவறும் இருக்கக் கூடாது. பொதுமக்கள் நம்பிக்கையுடன் ரேஷன் கடைகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மேலும், தரமற்ற உணவுப் பொருட்கள் கிடங்குகளில் இருந்து வந்தால், அவற்றை பொதுமக்களுக்கு வழங்காமல் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். "மக்கள் பயன்படுத்த முடியாத தரத்தில் பொருட்கள் இருந்தால் அதை ஏற்கக்கூடாது. ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கும், என் பார்வைக்கும் கொண்டு வர வேண்டும்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அமைச்சர் அறிவுறுத்தினர். "ரேஷன் கடைகளுக்கு வரும் மக்கள் ஏழை, எளியவர்கள் மட்டுமல்ல. பல்வேறு தரப்பினரும் பயன் பெறுகின்றனர். அவர்களிடம் மரியாதையுடனும் அன்புடனும் பேச வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டம் முக்கியமான மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் அல்லது இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் தற்போது 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சேவை வழங்கும் வகையில் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் மொத்தம் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான கடைகள் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. சமீப காலமாக சில ரேஷன் கடைகளில் எடை குறைவு, தரமற்ற பொருட்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியமான நடத்தை குறித்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், உணவுத் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்காக தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications