மின்னல் வேகத்தில் செயல்படும் முதல்வர்.. அதிகாரிகளால் கூட ஈடுகொடுக்க முடியவில்லை.. அமைச்சர் பாராட்டு
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய தமிழக அமைச்சர்கள் முதல்வரின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினர்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ' சிறுபான்மையினர் உரிமைகள் நாள் ' கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மைனாரிட்டிகளுக்கான அரசு
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், " தனது அரசு மைனாரிட்டி அரசு அல்ல, மைனாரிட்டிகளுக்கான அரசு என்று சொன்னவர் கருணாநிதி. பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன், காமராசர், காயிதே மில்லத், அம்பேத்கர் போன்றவர்கள் இன்று இல்லை, ஆனால் அவர்களது கருத்தை உள்வாங்கி மக்களின் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

அறிவு, ஆற்றல், திறமை
கருணாநிதியிடம் இருந்து பெற்ற அறிவு, ஆற்றல், திறமை, தன்னம்பிக்கையுடன் நமது தற்போதைய முதல்வர் செயல்படுகிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது நெல்லையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக இயக்கப்பட்ட சமத்துவபுர மாதிரியில் அலங்கரிக்கப்பட்ட பேருந்துக்கு என்னைத் தலைமையேற்று அமர வைத்தார். அவரது மகன் ஸ்டாலின் சிறுபான்மை இனத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்க்கிறார்" என்று தெரிவித்தார்.

ஈடுகொடுக்க முடியவில்லை
இதைத் தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "திட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர்கள், அதிகாரிகளால் முதலமைச்சரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவ்வளவு வேகமாகச் செயல்படுகிறார். சாதி, மத வேறுபாடற்று தமிழர் என்ற உணர்வை மட்டும் நாம் கொள்ள வேண்டும். பெண்கள் , குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு முறையாகத் தெரிவித்து வருகிறோம், அது போன்ற குற்றங்களைக் குறைக்க முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்" என்றார்.

மத துவேசம்
தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், "கடந்த காலத்தில் தமிழகத்தில் வழிபாட்டுரிமைக்கே அச்சுறுத்தல் இருந்தது. சிறுபான்மை என்ற வார்த்தைக்கு சமூக ஊனம் என்று அர்த்தம். மத அரசியல் நடத்துவோர் குறித்து தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பங்கேற்ற கோயில் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்த நபர் கன்னியாஸ்திரிகள், ஸ்டேன் சுவாமி போன்றவர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கும் விதமாக, மத துவேசத்துடன் பேசினார். நான் அந்த மேடையில் பேசும்போது விவேகானந்தர் பற்றிப் பேசினேன். விவேகானந்தர் அமெரிக்காவில் சமயப் பொறுமை குறித்துப் பேசினார் . ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகள் விவேகானந்தரின் பேச்சை இன்று ஏற்பார்களா என்பதே சந்தேகம்தான். நல்லோர் பேசியதை மூடி மறைத்து, தேவையான சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications