'நாகர்கோவில் தமிழ்'.. 'மாணவர்களின் உற்சாகமூட்டி'.. யார் இந்த சைலேந்திர பாபு ஐபிஎஸ்!
சென்னை : எத்தனை வருடங்கள் எத்தனை ஊரில் வேலை பார்த்திருந்தாலும் நாகர்கோவில் தமிழின் வாடை சைலேந்திர பாபு ஐபிஎஸ்சின் ஒவ்வொரு பேச்சிலும் வெளிப்படும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நாளை பொறுப்பேற்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ் சிறிதுநேரம் பேசினாலும் அவர் நாகர்கோவில்காரர் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
Recommended Video
பேச்சில் மண் வாசனையை அப்படியே வைத்திருக்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ், தோற்றத்தில் மட்டுமல்ல, பணியிலும் மிடுக்கானவர். மிகவும் நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என்று பெயர் எடுத்தவர். ரவுடிகள் ஒழிப்பு தொடங்கி சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது களத்தில் இறங்கி பணியாற்றியது வரை இவரது பணி அபாரமானது.
மாணவர்களிடம் தொடர்ந்து தன்னம்பிக்கைகளை விதைத்து வரும் சைலேந்திர பாபு ஐபிஎஸ் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தவர் சைலேந்திர பாபு. மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்.

1989ல் பணி தொடங்கினார்
கோபிச்செட்டிபாளையத்தில், காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (ADSP) 1989ல் காவல்துறை பணியை சைலேந்திர பாபு தொடங்கினார். அன்று முதல் இன்று வரை தனது பணிகளுக்கிடையே தொடர்ந்து மாணவர்களிடையேயும், இளைஞர்களிடமும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் கருத்துகளை பேசி வருகிறார்.எழுதி வருகிறார்.

எஸ்பியாக பணிகள்
செங்கல்பட்டு, கடலூர் காஞ்சிபுரம் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றிய சைலேந்திர பாபு பின்னர், சென்னை அடையாறில் துணை ஆணையராக பணியாற்றினார். பதவி உயர்வு பெற்ற அவர், சென்னையில் இணை ஆணையராகவும் பணியாற்றி உள்ளார்.

மறக்க முடியாத சம்பவங்கள்
இவர் கோவை காவல் ஆணையராக 2010-11 ஆண்டுகளில் பணியாற்றினார். அப்போது கோவை கொடிசீயா மைதானத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடைபெற செய்தார். இதேபோல் இன்னொரு சம்பவத்தை சொல்லியே ஆக வேண்டும். பச்சிளம் குழந்தைகளான அக்கா தம்பி இருவரையும் பாலியல் நோக்கில் கொடூரமாக குற்றவாளிகள் கொலை செய்தனர். அந்த குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் சைலேந்திர பாபுவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாராட்டினார்.

உரிமையோடு பழகிய மாணவர்கள்
கோவையில் கமிஷனராக இருந்த கால கட்டம் தான் மாணவர்களுடன் சைலேந்திர பாபு நெருக்கமாக இருக்க. காரணம், கோவை மக்கள் பண்போடும், அன்போடும் பழகியதை ஒருமுறை கூறிய சைலேந்திர பாபு. கோவை மக்கள் தங்களின் தேவையை உரிமையோடு என்னிடம் கூறுவார்கள் அங்கு, அடிக்கடி மாணவர்கள் பலர் என்னை நேரில் சந்தித்துப் பேசுவார்கள் அதுதான் மாணவர்களுடனான நெருக்கமான பயணத்துக்குத் தொடக்கம் என்று என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டார்னியர் விமானம் விபத்து
கோவைக்கு பின்னர் வடக்கு மண்டல ஐஜி ஆகவும் பணியாற்றிய சைலேந்திர பாபு, லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமை அதிகாரி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி என பல்வேறு பணிகளை வகித்தார். இதனிடையே பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டிஜிபியாக பணியாற்றினார். இவரது பதவி காலக்கட்டத்தில் தான் கடலோர காவல்படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது, அந்த சம்பவத்தில் மீட்பு பணியில் சைலேந்திரபாபு கடலோர காவல் படையினருடன் இணைந்து பணியாற்றினார்.

தற்காப்பு கலை
இதேபோன்று தீயணைப்பு துறையின் ஏடிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பு வகித்த காலத்தில், அதாவது 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாம்பரம் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நீரில் மூழ்கிய பொதுமக்களை காப்பாற்றினார். பல பள்ளிகளில் பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சிகள் தர நடவடிக்கை எடுத்தவரும் இவர் தான்.

குடியரசுத் தலைவர் விருது
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக குடியரசுத்தலைவர் விருது, உயிர் காக்கும் பணிகளை மேற்கொண்டமைக்கான பிரதம மந்திரி விருது, தமிழக முதலமைச்சரின் கேலண்டரி விருது, தமிழக சிறப்பு டாஸ்க் ஃபோர்சின் கேலண்டரி காவல்துறை பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் சைலந்திர பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு முக்கியம்
சைலேந்திர பாபு பிரபல தமிழ் ஊடகம் ஒன்றுக்கு ஒரு முறை பேட்டி அளித்தார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகளை பாருங்கள். இளைஞர்கள், சமுதாயமும் குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். தன் பண்புகளை இளைஞர்கள் ஆராய்ந்து, அவற்றை சரி செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள் என்றார்.

காக்கிக்சட்டை
சைலேந்திர பாபு காக்கி சட்டை அணிந்ததற்காக பெருமைப்பட்ட சம்பவம் எது தெரியுமா? அதையும் அவரே கூறியுள்ளார். 1997ல் சிவகங்கையில் சில காவல்துறையினருடன் செல்லும்போது, ஏற்கனவே பாலத்திலிருந்து பேருந்து ஒன்று ஏரிக்குள் விழுந்திருந்தது. நாங்கள் போவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்னரே அது விழுந்திருக்க வேண்டும். பேருந்தின் பெரும்பகுதி மூழ்கியிருந்தது. ஏற்கனவே பலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருந்தனர். என்னுடன் வந்திருந்த அனைவரும் சிறந்த நீச்சல் வீரர்கள். நாங்கள் அனைவரும் சற்றும் தாமதிக்காமல் ஏரியில் குதித்து அவர்களைக் காப்பாற்றினோம். 18 பேரைக் காப்பற்றிய அந்தத் தருணம் மிகவும் சிறப்பானது. ஆனால், பலரைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தமும் உண்டு என்று பேட்டியில் கூறியிருந்தார்.

சைலேந்திர பாபு
காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்து சிறப்பாக கடமையாற்றிய சைலேந்திர பாபு ஐபிஎஸ் ரயில்வே டிஜிபியாகப் பதவி வகித்து வருகிறார். நாளை முதல் தமிழகத்தின் தலைமை காவல் பொறுப்பான சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்கிறார். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற உடனேயே சைலேந்திர பாபு தான் தமிழத்தின் டிஜிபி என்று ஊடகங்களில் செய்தி வந்தது. காரணம் ஸ்டாலினுக்கு சர்ச்சை இல்லாத நேர்மையான அதிகாரிகளை பிடிக்கும். அந்த வகையில் சைலேந்திர பாபு தான் டிஜிபியாக வர வேண்டும் என்று விரும்பி இருந்தார். அது இன்று நடந்தள்ளது.












Click it and Unblock the Notifications