வட மாநிலத்தவர் பற்றி தீயாக பரவிய போலி செய்தி! கோவை, திருப்பூரில் ஆய்வு நடத்தும் பீகார் அதிகாரிகள்
வட மாநில தொழிலாளர்கள் குறித்து பீகார், ஜார்க்கண்ட் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
சென்னை: வட மாநிலத்தவர் மீது தாக்குதல் எனப் பொய்யான தகவலைச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வந்தனர். இதற்கிடையே பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து வந்த குழுக்கள், வரும் நாட்களில் கோவை, திருப்பூரில் ஆய்வு நடத்த உள்ளனர்.
வட இந்தியாவில் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே வேலை தேடி இளைஞர்கள் தமிழ்நாடு வரும் பழக்கம் அதிகமாகவே இருந்தது. வேலை நிச்சயம் கிடைக்கும், அங்குடன் ஒப்பிடுகையில் ஊதியம் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் இங்கு வருகிறார்கள்.
தமிழ்நாட்டிலும் கட்டிட வேலை, ஹோட்டல் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழக இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதை வட மாநில இளைஞர்களே பூர்த்தி செய்கிறார்கள்.

வட மாநில தொழிலாளர்கள்
தமிழக இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதாலேயே வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதாக வணிகர்களும் கூறி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே இணையத்தில் திட்டமிட்டு சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாகக் கூறி பொய்யான வீடியோக்களையும் தகவல்களையும் பரப்பி வருகின்றனர். சில வட இந்திய ஊடகங்களும் கூட இதுபோன்ற செய்திகளை வெளியிட்டன.

பொய்யான தகவல்கள்
இருப்பினும், வேறு எங்கோ நடந்த சம்பவங்கள் மற்றும் பழைய சம்பவங்களைத் திரித்து ஏதோ இப்போது தமிழ்நாட்டில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயன்று வருகின்றனர். இருப்பினும், இது பொய்யாகப் பரப்பப்படும் வீடியோக்கள் என்று தமிழ்நாடு போலீசார் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளனர். மேலும், இதுபோன்ற பொய்யான வீடியோக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிலர் மீது வழக்கும் கூட பதிவு செய்து அதிரடி காட்டியுள்ளது தமிழ்நாடு போலீஸ்.

பீகார் தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும் போதிலும், திட்டமிட்டு இதுபோன்ற தகவல்கள் பரப்புவதால் சில மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாகப் பீகார் மாநிலத்தில் சட்டசபையிலேயே அம்மாநில பாஜக எம்எல்ஏக்கள் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தாக்குதலைத் திட்டவட்டமாக மறுத்த அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருந்தார். மேலும், பீகாரில் இருந்து அதிகாரிகளை கொண்ட குழுவும் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படும் என்று அவர் அறிவித்தார்.

குழு வருகை
இதற்கிடையே வட மாநிலத்தவர் மீது தாக்குதல் எனப் பொய்யான தகவல் பரப்பப்படும் நிலையில், அந்த மாநிலங்களில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் குழுக்களுடன் தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். பீகார், ஜார்க்ண்ட் மாநிலக் குழுக்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆலோசனை
இதற்கிடையே வட மாநிலத்தவர் மீது தாக்குதல் எனப் பொய்யான தகவல் பரப்பப்படும் நிலையில், அந்த மாநிலங்களில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் குழுக்களுடன் தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் ஆலோசனை நடத்தினர். பீகார், ஜார்கண்ட் மாநிலக் குழுக்களுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வட மாநில தொழிலாளர்கள்
பீகார் மாநிலத்தில் இருந்து பாலமுருகன் ஐஏஎஸ் தலைமையிலான குழு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. அதேபோல ஜார்கண்ட் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரி தமிழ்வாணன் உள்ளிட்டோர் கொண்ட குழு தமிழ்நாடு வந்துள்ளது. இந்த குழுவினர் தான் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, சென்னை புறநர் பகுதிகளில் இருக்கும் ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களிடம் அவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஜார்கண்ட்டில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் விசாரித்தனர்.

ஆய்வு
தமிழ்நாடு அதிகாரிகளுடன் ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பீகார் குழு, பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்றனர். மேலும், அடுத்த இரு நாட்கள் திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர். இது பொய்யான வீடியோ என்று தெரிந்துவிட்ட போதிலும் அஞ்சும் சில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாகவே கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications