ஆளுமைகள் இல்லாதபோதும்.. வேறு கட்சிகளுக்கு வாய்ப்பு வழங்காத மக்கள்.. திமுக அல்லது அதிமுகதான் சாய்ஸ்
சென்னை: தமிழக மக்கள் ஒரு விஷயத்தில் ரொம்பவே உறுதியாக இருக்கிறார்கள்.. ஜெயலலிதா அல்லது கருணாநிதி இல்லாத களம் என்றபோதிலும், மூன்றாவது ஒரு கட்சிக்கு அல்லது மூன்றாவது ஒரு அரசியல் சக்திக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்பதில் அவர்கள் திட்டவட்டமாக இருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன.
நாடறிந்த கலைஞன் கமல்ஹாசன்.. தொடர்ந்து தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் சீமான், ஆர்கே நகர் தொகுதியில் அசத்தல் வெற்றி பெற்று நாட்டையே வியப்புக்குள்ளாக்கிய தினகரன் ஆகியோர் தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைந்து இந்த தேர்தலை சந்தித்த போதிலும் கூட, மக்கள், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கூட்டணிகளும் மட்டுமே மாற்றி மாற்றி வாக்குகளை பதிந்து தள்ளியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக அல்லது அதிமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும்தான் வெற்றி பெற்று உள்ளனர், அல்லது முன்னிலையில் உள்ளனர். கோவை தெற்கு மட்டும் இன்னும் இழுபறியாக இருக்கிறது.

புதிய தலைமைகள் கீழ் தேர்தல்
இத்தனைக்கும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் சேர்ந்த ஆளுமைமிக்க மூத்த தலைவர்கள் மறைந்த நிலையில் தமிழகம் எதிர்கொண்ட தேர்தல் இது. அதிமுகவுக்கு, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரட்டை தலைமை வாய்த்தது. திமுகவுக்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த கட்சிகளும் முதல்முறையாக புதிய தலைமையின் கீழ் தேர்தலை சந்தித்தன. ஆனால், மக்கள் இந்த இரு கட்சிகளுக்கும் மட்டும்தான் அல்லது இரு கட்சிகளின் கூட்டணிக்கு மட்டும்தான் வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர்.

வருங்காலமும் திராவிட கட்சிகளுக்குத்தான்
இதன் மூலம், தமிழக அரசியலில் வெற்றிடம் கிடையாது.. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகள்தான் வருங்காலத்தையும் வழிநடத்தப் போகின்றன என்பது தெள்ளத்தெளிவாக உறுதியாகியுள்ளது. வெற்றிடம் இருப்பதாக கூறி வந்த நடிகர் ரஜினிகாந்த், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஜகா வாங்கியது இந்த கள நிலவரத்தை நன்கு அறிந்ததால் தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத களம்
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இல்லாமல் சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்கள் வேறு எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் இந்த இரு கட்சிகளுக்கும் வாக்குகளை வழங்கி உள்ளார்கள் என்றால், இனி வருங்காலத்திலும் இந்த இரு கட்சிகள் மீது மட்டும்தான் மக்கள் நம்பிக்கை கொள்ளப் போகிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

திராவிட கட்சிகளின் சாதனை
திராவிட கட்சிகளை மக்கள் நம்புவதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று.. பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழகம் பல்வேறு விஷயங்களிலும் முன்னேறி உள்ளதற்கு இந்த இரு கட்சிகளும் முக்கிய காரணம், எனவே இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இதை தாண்டி, நகரங்கள் முதல் கிராமங்கள் வரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும்தான் நிர்வாகிகள் பலம் இருக்கிறது. தலைவர்கள் செல்வாக்கை தாண்டி ஒவ்வொரு ஊரிலும் உள்ள இந்த இரு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வாக்காளர்களிடம் செல்வாக்கு காண்பித்து வாக்குகளை அறுவடை செய்ய முடிகிறது.

மக்கள் சாய்ஸ்
கண்டிப்பாக பணப்பட்டுவாடா நடைபெற்றதை மறுக்க முடியாது. துரதிருஷ்டவசமாக, பணப்பட்டுவாடா என்பது, நமது மாநில தேர்தல் களத்தில் ஒரு அங்கமாக மாறி போய் விட்டது. இந்த விஷயத்திலும் இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் யாரும் நெருங்கி விட முடியாது என்பதுதான் யதார்த்தம். இத்தனை விஷயங்களும் சேர்ந்துதான் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் தொடர்ந்து வெற்றி பெற வைத்துக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications