போலீஸ் உயர்பதவிகளில் அரசியல் சாயம்.. அறிவாலயம்போல் செயல்படும் காவல்துறை..மீண்டும் சீண்டிய அண்ணாமலை
சென்னை: தமிழ்நாட்டு காவல்துறையின் அறிக்கைக்கு ஒவ்வொரு வரிக்கும் விரைவில் விளக்கம் அளிக்கப்படும். தற்போதைய தமிழ்நாடு காவல்துறை திமுகவின் அறிவாலயம் போன்று செயல்பட்டு வருகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், காவல் துறையின் உயர் பதவிகள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது வருத்தமாக இருக்கிறது. நீண்டகாலமாக தமிழக காவல்துறை சம்பாதித்த நற்பெயர் முட்டாள்தனமான அரசியல் கோமாளித்தனங்களால் தரம் தாழ்த்தப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காவல் துறை சார்பில் அண்ணாமலையை கண்டித்து அறிக்கை வெளியான அடுத்த சில நிமிடங்களில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.

கோவை கார் வெடிப்பு
கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் ஜமோ முபின் என்பவர் இறந்தார். இவரிடம் 2019ல் என்ஐஏ விசாரணை நடத்தி இருந்தது. மேலும் சம்பவம் நடந்தபோது கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இது பெரும் பிரச்சனையாக மாறியது. இதுபற்றி உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். டிஜிபி சைலேந்திரபாபு உள்பட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

6 பேர் கைது
மேலும் வழக்கு தொடர்பாக உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது தேசிய புலனாய்வு முகமையிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டு பொட்டாசியம் நைட்ரேட் உள்பட வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணாமலை விமர்சனம்
தமிழகத்தில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு மற்றும் போலீசாரை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். கார் வெடிப்பு விஷயத்தில் காவல்துறை அலட்சியம் காட்டியுள்ளது. என்ஐஏவிடம் தாமதமாக வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக காவல் துறை உஷாராக செயல்படவில்லை என அடுக்கடுக்காக விமர்சனம் செய்தார்.

தமிழ்நாடு காவல் துறை அறிக்கை
இந்நிலையில் இன்று தமிழக காவல்துறை அண்ணாமலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில், ‛‛பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்த கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருள்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்னவென்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த வழக்கை தாமதமாக என்ஐஏவுக்கு அனுப்பியதாக கூறுகிறார்.

பொய் பழி சுமர்த்த
இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்குப்பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்து கூட வழக்குகள் என்ஐயிடம் ஒப்படைக்கப்பட்டன. திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடில்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல்கிறார். அவர் குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்தத் தகவலும் இல்லை. எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலை பதில்
இவ்வாறாக கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக விஷயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழக காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. இந்நிலையில் தான் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக காவல் துறை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் சில விஷயங்களை கூறியுள்ளார். இதுபற்றி அண்ணாமலை கூறியுள்ளதாவது:

திமுக அறிவாலயம் போல்..
தமிழ்நாட்டு காவல்துறையின் அறிக்கையின் ஒவ்வொரு வரிக்கும் விரைவில் விளக்கம் அளிக்கப்படும். தமிழ்நாடு டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட அனைத்து காவல் துறை சகோதர்கள் மீதும் மிகுந்த மரியாதை உள்ளது. தற்போது தமிழ்நாடு காவல் துறை என்பது திமுகவின் அறிவாலயம் போன்று செயல்பட்டு வருகிறது.

வருத்தம் இருக்கிறது
காவல் துறையின் உயர் பதவிகள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது வருத்தமாக இருக்கிறது. 2 அதிகாரிகள் தங்களின் கடமைகளில் இருந்து தவறியதாக நாங்கள் புகார் செய்தோம். இந்த 2 அதிகாரிகள் தங்களை பாதுகாத்து கொள்ள காவல்துறை பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

சரியாக ஆய்வு செய்ய வேண்டும்
எங்களை குறை கூறாமல் தோல்வி எங்கு நிகழ்ந்தது என்று சரியாக ஆய்வு செய்ய வேண்டும். நீண்டகாலமாக தமிழக காவல்துறை சம்பாதித்த நற்பெயர் முட்டாள்தனமான அரசியல் கோமாளித்தனங்களால் தரம் தாழ்த்தப்படுகிறதே தவிர நாங்கள் ஒன்றும் செய்யவில்லை'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications