அதெப்படி திமிங்கலம்? 2 லட்சம் தபால் ஓட்டுகள் மிஸ்? கடும் அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்! என்னாச்சு?
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இருக்கும் நிலையில் மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. 60-க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் என்னும் பணி துவங்கும் என்றும், காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் என்னும் பணி தொடங்கும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் கூறியுள்ளார். இந்த சூழலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையைப் பற்றிய தகவல்களில் முரண்பாடு இருப்பதாக கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக சுமார் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் அதிக அளவில் மக்கள் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் இந்த பணிகள் நடைபெற உள்ளன.
2026 தமிழக சட்டசபை தேர்தல்
வாக்கு எண்ணிக்கை நாளில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும், அதன் பின்னரே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், காலை 8.30 மணிக்கு இயந்திர வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகும் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.
தபால் வாக்கு எண்ணிக்கை
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தபால் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களில் முரண்பாடு இருப்பதாக சில தரப்புகள் கூறி வருகின்றன. தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் தபால் வாக்கு செலுத்திய எண்ணிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு ஊழியர்கள் வாக்குகள்
தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சுமார் 3.60 லட்சம் அரசு அலுவலர்களில், 2.88 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு கூடுதலாக காவல்துறையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 3.36 லட்சம் பேரும் தபால் வாக்கு பதிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சுமார் 1.73 லட்சம் பேரும் தபால் வாக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது.
6.37 லட்சம் வாக்குகள்
இந்த மூன்று பிரிவுகளின் எண்ணிக்கைகளையும் சேர்த்து பார்த்தால் மொத்தம் சுமார் 8.15 லட்சம் தபால் வாக்குகள் இருக்க வேண்டும் என சிலர் கணக்கிட்டு வருகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவலின்படி, மொத்தம் சுமார் 6.37 லட்சம் தபால் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
2 லட்சம் தபால் ஓட்டுகள்
"எண்ணிக்கைகள் சேர்த்து பார்த்தால் 8 லட்சத்திற்கும் மேல் இருக்க வேண்டிய நிலையில், எவ்வாறு 6 லட்சம் மட்டுமே பதிவாகியதாக கூறப்படுகிறது?" என்ற கேள்வி பல தரப்பினரால் எழுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் காலங்களில் இத்தகைய சந்தேகங்கள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஒன்று என்றாலும், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாத வகையில் தெளிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.
புதிய வாக்காளர்கள்
இதற்கிடையில், இந்த தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக கூறப்பட்டாலும், வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரித்ததா என்பது குறித்தும் வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. சில அரசியல் தரப்புகள் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது வாக்களித்தவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறவில்லை எனக் கூறுகின்றன. மற்றொரு தரப்பு, இந்த முறை புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களித்ததாகவும், அதனால் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் கூறுகிறது.
பலமுனைப் போட்டி
தற்போது திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையில் பலமுனைப் போட்டி நிலவுவதால், இறுதி முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், தபால் வாக்கு எண்ணிக்கை தொடர்பான இந்த முரண்பாடு குறித்த விளக்கம் வெளியாகும் வரை அரசியல் வட்டாரங்களில் விவாதம் தொடரும் என தெரிகிறது. இறுதியாக மே 4ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியாகிய பிறகே அனைத்து சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications