பெரியார் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம்.. வருத்தம் தெரிவித்தது டி.என்.பி.எஸ்.சி
Recommended Video
சென்னை: பெரியார் பெயரை ஜாதியோடு சேர்த்து குறிப்பிட்டு கேள்வித் தாள் வழங்கியதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக குரூப்2 தேர்வு நேற்று, 2 ஆயிரத்து 268 மையங்களில் நடைபெற்றது.
இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்ற கேள்விக்கு தரப்பட்ட 4 விடைகளில், தந்தை பெரியாரின் பெயர் இ.வெ.ராமசாமி நாயக்கர் என இன்ஷியல் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது.
அதே கேள்விக்கு வழங்கப்பட்ட பிற ஆப்ஷன்களில், காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணாதுரை என்று தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடப்பட்ட நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுந்தது.
ஜாதி ஒழிப்பு போராளியான பெரியாரை ஜாதி வட்டத்திற்குள் அடைத்து, அதன் மூலம், மீண்டும் ஜாதி ஆதிக்க ஆதாயம் பெற சில ஆதிக்க வெறி சக்திகள் சமீபகாலமாக செயல்பட்டு வருகின்றன. இவை கல்வித்துறையிலும் கரம் பதித்துவிட்டன என்ற கேள்வியை இந்த வினாத்தாள் எழுப்பியிருந்தது.
திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட, பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் இதற்கு, கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
[ஈ.வெ.ராமசாமி நாயக்கர்.... குரூப் 2 தேர்வு வினாவில் விஷமம்... தேர்வர்கள் புகார்!]
இந்த நிலையில், குரூப்2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயரை தவறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிக்கையில் தெரிவித்துள்ளது. வினாத்தாள் மிகுந்த கவனத்தோடு தயாரிக்கப்பட்டும், தந்தை பெரியாரின் பெயரை தவறாக குறிப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.