ஸ்டாலின் சொன்ன 1 ட்ரில்லியன் டாலர் கணக்கு.. ரூட் மேப் தயாரிக்கும் பாஸ்டன் நிறுவனம்
சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் ஆக உயர்ந்ததற்கான ரூட் மேப், இன்னும் ஆறே மாதத்தில் தமிழ்நாடு அரசு உருவாக்க உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

14 மாதங்களில் 2 லட்சம் கோடி:
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதே தனது அரசின் இலக்கு என்று தொடர்ந்து தெரிவித்துவருகிறார். அதை வெறும் மேடைப் பேச்சுக்கான அலங்கார வார்த்தையாக இல்லாமல் உண்மையாகவே அதற்கான வழிமுறைகளை அவரது அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
ஆகவேதான் கடந்த 14 மாதங்களில் மட்டும் தமிழகம் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூலை மாதம் 4 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.1,25,244 கோடி மதிப்பிலான 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகின.
இதன்மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் சாத்தியக்கூறுகளை ஸ்டாலின் உருவாக்கினார்.
கடந்த சில நாள்கள் முன்னர் கூட முதல்வர் ஸ்டாலின் எத்தனால் கொள்கையை வெளியிட்டார். அது குறித்து ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவு ஒன்றில், "எத்தனால் கொள்கை உள்ளிட்ட 3 கொள்கைகளை வெளியிட்டேன். இந்த இரண்டு ஆண்டுகளில் தொழில்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்திடும் நோக்கில், தொழிற்துறையினரின் கோரிக்கைகளைக் கருத்தில்கொண்டு 10 புதிய கொள்கைகளை வெளியிட்டிருக்கிறோம். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற நம் இலக்கை நோக்கி விரைவோம்!"என்றும் கூறியிருந்தார்.

எத்தனால் கொள்கை வெளியீடு:
மேலும் அவர் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023', 'தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023', 'தமிழ்நாடு சரக்கு போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023' மற்றும் 'தமிழ்நாடு தொழில் நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், மற்றும் செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்' ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்திய அறிவியல் தொழில்முனைவோர் வர்த்தக அமைப்பின் 14வது மாநாடு சென்னையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.
இந்தியாவில் உள்ள 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வரும் 2030க்குள் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று நான் உறுதி ஏற்றிருக்கிறேன்.
அதைச் சாத்தியமாக்க ஆயிரக்கணக்கான புதிய தொழில்முனைவோர்களைத் தொழில் நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும்" என்று பேசி இருந்தார். அப்போதே இந்த அரசு நிதிக் கொள்கையை எப்படி அணுகி வருகிறது என்பதை விளக்கும் விதமாக, "தொழில் வளர்ச்சியை நிதி அளவுகோலாக்க மட்டுமல்லாமல்; நீதியின் அளவுகோலாக, சமூகநீதியின் அளவுகோலாக நாங்கள் பார்த்துக் கொண்டுள்ளோம்.

துபாய் பயணம் தந்த 2600 கோடி:
புதிய புத்தாக்க தொழில்களில் இறங்கிப் பார்க்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டதாக இந்த அரசு இருக்கிறது. புது யுக சிந்தனைகளோடு சுதந்திரமாக இயங்கக் கூடிய புது தொழில்களை ஊக்கப்படுத்தி வந்து கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றும் கூறியிருந்தார்.
இதன் ஒரு பகுதியாகவே கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசுமுறை பயணமாகத் துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலின், 2600 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக இப்போது1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உத்தியை வகுப்பதற்கான வழிகாட்டி வரைபடம் இன்னும் ஆறு மாதங்களில் தயாராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் பாஸ்டன் கன்சல்டிங் குரூப்-ஐ தேர்ந்தெடுத்துள்ளது; இது முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு, இயற்கை வளங்கள் மற்றும் காலநிலை மீதான தாக்கத்தை அளவிடும்.

ரூட் மேப் தயாரிக்கும் பாஸ்டன்:
1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, தமிழகத்திற்கான ஒட்டுமொத்த உத்தியை வகுப்பதற்கான வழிகாட்டி வரைபடத்தை உருவாக்குவதற்காக பாஸ்டன் கன்சல்டிங் குரூப் ஐ தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
இந்திய அளவில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு இருந்துவருகிறது. மேலும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மிகவும் நகரமயமான, தொழில்மயமான மாநிலமாகவும் வலுவான உற்பத்தியையும் பெரிய அளவிலான சேவைத்துறை வசதிகளுடன் இணைந்ததாக இருந்து வருகிறது.
இதை எல்லாவற்றையும் விட இந்திய ஏற்றுமதியில் 9%க்கும் அதிகமான பங்களிப்பைத் தமிழ்நாடு செய்துவருகிறது. இது மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாகவும் தமிழகம் உள்ளது.
5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டுள்ளது. அந்தப் பாதையின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு முக்கிய பங்காற்ற உள்ளதை முதல்வர் ஸ்டாலின், தனது பொருளாதார கொள்கை வகுப்பு மூலம் உறுதி செய்துள்ளார்.

2030க்குள் 1 டிரில்லியன் டாலர்:
அதாவது 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குப் பொருளாதாரத்தை உயர்த்த ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்கு தற்போது உள்ள வளர்ச்சியின் விகிதத்தைப் பன்மடங்கு உயர்த்த வேண்டும்.
அத்துடன் உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அது தவிர முதலீட்டு விகிதத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்தாக வேண்டும்.
தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நோடல் ஏஜென்சி ஆகிய இரண்டு ஒட்டுமொத்த இணைந்து இதற்கான உத்தியை, வழிகாட்டும் வரைபடத்தை உருவாக்குவதற்கான வேலைகளை மேற் கொண்டுள்ளன.
இதற்கான ரூட் மேப்பை தயாரிப்பதற்கான உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்ட பிறகு, தமிழ்நாடு அரசு (பாஸ்டன் கன்சல்டிங் குரூப்) பாஸ்டன் ஆலோசனைக் குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்பது ஒன் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான இலக்குகளை உருவாக்குவது, அதற்கான பொருளாதாரத்தை மேம்படுத்த உத்தியை வகுத்து அத்துடன் வழிகாட்டும் வரைபடத்தை உருவாக்குவது.
மேலும் கள யதார்த்தங்களை உள்வாங்கிக் கொண்டு அதற்கான தேவைகளை, சாத்திய கூறுகளைக் கண்டறிவது. அதைக் கொண்டு அரசுக்கு மிகச் சிறப்பான ஆலோசனைகளை அளித்துத் திட்டமிட்டபடி 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடையைப் பல பரிந்துரைகளை இந்நிறுவனம் முன்வைக்கும்.

அது என்ன SWOT analysis ?
இந்த செயல்முறையானது மாநிலத்திற்கான பொருளாதார அடிப்படையை உருவாக்குவது மற்றும் ஒரு மேக்ரோ-பொருளாதார மாநிலத்தின் மொத்த மதிப்புக் கூட்டப்பட்ட மாதிரியை உருவாக்குவது மற்றும் தற்போதைய வலி புள்ளிகள், எதிர்கால வாய்ப்புகள் மற்றும் அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளப் பங்குதாரர் விவாதங்களை நடத்துவது ஆகியவை அடங்கும்.
தொழில்கள், விவசாயம் மற்றும் சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஐந்து அல்லது ஆறு நாடுகள் அல்லது பிராந்தியங்களின் பொருளாதார வளர்ச்சியையும் ஆலோசகர் தரப்படுத்துவார்.
இத்திட்டத்தின் படி SWOT analysis மூலம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துறைகளை ஆய்வு செய்வார்கள். அதன்மூலம் எதில் அதிக வாய்ப்புகள் உள்ளன? குறைந்த அளவிலான வாய்ப்புள்ள துறைகள் எவை? ஏறக்குறைய தேவையற்ற துறைகள் யாவை?
கூடவே பிற துணைத் துறைகளை ஆராய்வது, அவற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடையாளம் கண்டும் வேலை வாய்ப்புக்கான இலக்குகளை 2030க்குள் வகுக்க முன்னுரிமை கொடுக்கப்படும்"என்கிறார் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இயங்கிவரும் ஒரு அதிகாரி.












Click it and Unblock the Notifications