பழைய ஓய்வூதிய திட்டம்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியானது தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: அரசு ஊழியர்களுக்கு தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த குழுவிடம் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த கருத்துக்களை வழங்குவதற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தியா முழுவதும் இந்த நடைமுறை அமலுக்கு வந்த நிலையில் பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதனையடுத்து சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கு மேலாக புதிய ஓய்வூதிய திட்டம் தான் நடைமுறையில் இருக்கிறது.

திமுக ஆட்சி
2021 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், திமுக ஆட்சி அமைந்து நான்காண்டுகள் நிறைவடைந்து ஐந்தாம் ஆண்டில் பயணிக்கிறது. ஆனால், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், அரசுக்கு எதிரான போராட்டம் நடத்துவதற்கு அரசு ஊழியர்கள் தீர்மானித்தனர்.
தமிழக அரசு
இதனையடுத்து தமிழக அரசு, தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பழைய ஓய்வூதிய திட்டம்
தொடர்ந்து அந்த குழுவினர் அரசு ஊழியர்கள், பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நடைமுறை ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அந்த குழு தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை தர இருக்கிறது. அந்த அறிக்கையை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள்
இந்த நிலையில் இந்த குழுவிடம் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த கருத்துக்களை வழங்குவதற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு தரப்புடன் இந்த குழு ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறது.
ககன்திப் சிங் பேடி
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது இது தொடர்பாக தமிழக நிதி அமைச்சகத்தின் பென்ஷன் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கூடுதல் தலைமை செயலர் ககன்திப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு தற்போது அரசு ஊழியர்களை சந்தித்து ஓய்வூதியம் குறித்த ஆலோசனைகளை பெற இருக்கிறது. இதற்காக வரும் 18 மற்றும் 25ஆம் தேதியும், செப்டம்பர் மாதம் 1 மற்றும் 8ஆம் தேதியும் பல்வேறு அரசு துறை ஊழியர்கள் சங்கங்களை சந்தித்து பேச இருக்கிறது.
அரசு ஊழியர்களுடன் ஆலோசனை
இதை அடுத்து அரசு ஊழியர்கள் சங்கங்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு வணிகவரி துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு துறை ஓட்டுநர்கள் சங்கம், பணி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் சங்கம், அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications