நீண்ட காலத்துக்குப் பிறகு.. தமிழகத்தில் 2 பிராமண எம்.எல்.ஏக்கள்.. சொல்லி அடித்த தவெக!
சென்னை: நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்ற 2 பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களுமே தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் எச்.வி.ஹண்டே அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தார். பிராமணரான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளித்து வந்தார். இந்நிலையில் தற்போது, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் ஒரு வேட்பாளர் கூட பிராமணர் இல்லை.

கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஒரு வேட்பாளர் கூட களமிறக்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் ஓய்வுபெற்ற டிஜிபி நடராஜன் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டார்.
ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு பிராமணர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா காலத்தில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக கூட இந்த முறை ஒரே ஒரு பிராமணரை கூட வேட்பாளராக களமிறக்கவில்லை. பிராமணர்களுக்கு ஆதரவான கட்சியாக கூறப்படும் பாஜக கூட, 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த சமூகத்தினருக்கு வாய்ப்பு மறுத்தது.
திமுக 164 தொகுதிகளில் நேரடியாகவும், மொத்தமாக 176 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கினாலும், ஒரு பிராமணரை கூட வேட்பாளராக அறிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சியும் பிராமணர்களுக்கு ஒரு தொகுதியை கூட ஒதுக்கவில்லை.
அதேசமயம், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2 தொகுதிகளிலும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 6 இடங்களிலும் பிராமணர் சமூக வேட்பாளர்களை களமிறக்கியது. பிராமணர் சமூகத்திற்கு குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கியை கொண்டுள்ள மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளை குறிவைத்து தவெக வேட்பாளர்களை நிறுத்தியது.
இந்த 2 பேருமே வெற்றி பெற்றுள்ளனர். மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெகவின் ரமேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். நீண்ட காலத்துக்குப் பிறகு, பிராமண சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறை தவெக அமைச்சரவையில் பிராமணர்களுக்கும் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 72 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 54 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications